யூஏஇயில் துவக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய ஐபிஎல் நிர்வாகிகள் குழு, தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இறுதி செய்துள்ளனர். ஆனால் இந்த தொடரில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பிசிசிஐ வெளியீடு
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தற்போது பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது ஐயூஏஇக்கு பயணம் மேற்கொள்ளும் அணி வீரர்களுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் பரிசோதனைகளில் 3 முறை கொரோனா நெகட்டிவ் வந்தால் மட்டுமே சக அணி வீரர்களை சந்திக்க அனுமதிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை அளிக்க மருத்துவ குழுவிற்கு உத்தரவு
அதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் அவர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 முறை நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் வீரர்களுக்கு பொதுவான இடத்தில் உணவை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணி வீரர்களின் உடல்நிலை குறித்த அறிக்கையை அளிக்க அணியின் மருத்துவ குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யூஏஇ பயணத்திற்கு முன்பு இதை அளிக்கவும் கூறப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு அளிக்க அறிவுறுத்தல்
சிறிய பாதுகாப்பான இடங்களை அணி வீரர்களுக்கு அளிக்கவும் அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. ஹோட்டலில் தங்குமிடத்தை தேர்ந்தெடுத்தாலும் மையப்படுத்தப்பட்ட ஏசி ஹால்களை தேர்ந்தெடுக்க கூறப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் தங்களது சொந்த கிட்களை எடுத்துவரவும், மைதானத்திலேயே அதை பத்திரப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.