டெல்லி: ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை விடுதலை செய்த டெல்லி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து டெல்லி போலீசார் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
2013ம் ஆண்டு நடை பெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 வீரர்களுக்கும் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள்.
இந்த 3 வீரர்களோடு சூதாட்ட தரகர்களையும் சேர்த்து மொத்தம் 36 பேர் மீது சூதாட்ட வழக்கு தொடரப்பட்டது. டெல்லி பாட்டியலா கோர்ட்டில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அவருக்கு நெருக்கமான சோட்டா ஷகில் ஆகியோர் ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தை பின்னால் இருந்து இயக்கினார்கள் என்று டெல்லி போலீசார் குற்றப் பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற, நீதிபதி, நீனா பக்வல் கிருஷ்ணா, குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா உள்பட 36 பேரையும் விடுவித்து கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி உத்தரவிட்டனர். போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.
சூதாட்ட வழக்கில் இருந்து விடுக்கப்பட்டாலும் ஸ்ரீசாந்த், சவான் மீதான தடையை நீக்க கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. விசாரணை கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக டெல்லி போலீசார் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் உள்பட 36 பேர் விடுதலையை எதிர்த்து போலீசார் நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரணை கோர்ட்டு குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தத்தில் பல்வேறு தவறுகள் இருப்பதாக மேல்முறையீட்டு மனுவில் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.