கொல்கத்தா: தடை செய்யப்பட்ட ஐபிஎல் அணியின் கேப்டன் டோணியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் மீண்டும் கை கோர்த்துள்ளனர். இந்த முறை புனே அணிக்காக இருவரும் இணைந்துள்ளனர். புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளமிங்கின் நியமனத்தை அணி உரிமையாளரும், ஆர்.பி - சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் தலைவருமான சஞ்சீவ் கோயங்கா அறிவித்துள்ளார்.
ஸ்டீபன் பிளமிங்கை தலைமைப் பயிற்சியாளராக அறிவிப்பதில் பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த வெற்றிக் கூட்டணியான டோணி - பிளமிங் ஜோடியின் பணி தொடரவுள்ளது.
பிளமிங் - டோணி கூட்டணி இரு ஐபிஎல் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. மேலும், இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி2- தொடர்களையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயங்கா கூறுகையில், சர்வதேச அளவில் பிளமிங் மிகச் சிறந்த வீரராக பரிமளித்தவர். அவரது தொழில்நுட்ப அறிவு மிகச் சிறந்தது. நிர்வாகத் திறமையில் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவர். அணியின் நலனுக்காக முழுமையாக தனது நேரத்தை அர்ப்பணிக்கக் கூடியவர். அவரது தலைமைத்துவத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த வகையில் புனே அணி, ஸ்டீபன் பிளமிங்கின் வருகையால் பெருமை பெறும் என்று கூறியுள்ளார்.
புனே அணியில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த டோணி, அஸ்வின், பாப் டு பிளஸிஸ் ஆகியோர் சேர்ந்துள்ளனர். அதேபோல தடை செய்யப்பட்ட இன்னொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரும் அணியால் வாங்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
தடை செய்யப்பட்ட சென்னை, ராஜஸ்தானுக்குப் பதில் புதிதாக புனே மற்றும் ராஜ்கோட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2016 தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.