காரணமே வேறு
ஐ.பி.எல். 15வது சீசனில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த 30 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வொக்ஸ், சாம் கரண், ஆர்சர் , ஜோ ரூட் போன்ற வீரர்கள் பங்கேற்கவில்லை. முதலில் இதற்கு காரணம் காயம் என்று தகவல் வெளியானது. ஆனால் இதன் காரணமே வேறு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
கூடுதல் விலை ஏன்?
இதே போல், இங்கிலாந்து அணியின் சாதாரண வீரர்களான ஜேம்ஸ் வீன்ஸ்,சாம் பில்லிங்ஸ், சாகிப் மகமுத் உள்ளிட்டோர் தங்களது விலையை அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கும், பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்காததற்கும் ஒரே காரணம் தான்
நிதி நெருக்கடி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு வர வேண்டிய வருமானம் குறைந்துள்ளது. மேலும் நிறவெறி புகாரில் கிரிக்கெட் வாரியம் சிக்கியதால் அதற்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் ஊக்கத் தொகையும் குறைக்கப்பட உள்ளது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது
நிவாரணம் அளியுங்கள்
அதன் படி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது சம்பளத்தை 20சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பங்கை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நிதியாக தர வேண்டும் என்று வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தங்களுக்கு வரியில் சலுகை வழங்கி தங்களுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். அணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புறக்கணிக்க முடிவு
இதன் காரணமாகவே தங்களது ஆரம்ப விலையை 2 கோடியாக அவர்கள் உயர்த்தியுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ஐ.பி.எல். அணிகள், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.. இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கவில்லை என்றால் ஐ.பி.எல். களையிழந்து காணப்படும் என கவலையில் உள்ள பி,சி.சி.ஐ., என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறது.