அனுபவ வீரர்கள் அணி
ஐபிஎல் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக அதிக அனுபவ வீரர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான், தோனி தலைமையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது அந்த அணி.
சிறப்பான ஆட்டம்
பலரும் வயதானவர்கள் அணி என கிண்டல் செய்தாலும் 2018 ஐபிஎல் தொடரை வென்ற சிஎஸ்கே, அடுத்த 2019 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. சிறப்பான செயல்பாட்டை அளித்து வந்தது.
அணி மாற்றம்
எனினும், 2019 ஐபிஎல் தொடரில் சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் இன்றி தவித்தது சிஎஸ்கே. தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசியதால் ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பியது. அதே போல, மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசமாக அமைந்தது. அதனால், தொடர் முடிவில் அணியில் மாற்றம் தேவை என்பதை கோடிட்டு காட்டினார் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்.
இளம் வீரர்கள் தேவை
அணிக்கு இளம் வீரர்கள் தேவை என்பதை அவர் கூறினார். அதனால், எப்படியும் 2020 ஐபிஎல் தொடரில் சில இளம் வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ள சிஎஸ்கே முயற்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஐபிஎல் ஏலம்
2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் மாற்றங்களை செய்து முடித்து விட வேண்டும் என்ற விதி உள்ளது.
ஐந்து வீரர்கள் நீக்கம்
இந்த நிலையில், சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை நாளை (நவம்பர் 15) அன்று விடுவிக்க உள்ளதாக ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. சிஎஸ்கே அணி ஒரேடியாக ஐந்து வீரர்களை நீக்க உள்ளதால் யார் அந்த வீரர்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
யார் அந்த 5 பேர்?
தற்போது வந்துள்ள சில ரகசிய தகவல்களின் படி இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்க்ஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஷர்துல் தாக்குர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முக்கிய வீரர்கள்
இந்த பட்டியலில் அம்பதி ராயுடு மற்றும் கேதார் ஜாதவ் கடந்த சீசனில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள். அவர்களை நீக்க சிஎஸ்கே அணி முடிவு செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே சமயம் அவர்கள் கடந்த சீசனில் சரியாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் வாங்கலாம்
தற்போது தங்களுக்கு வேண்டிய சில வீரர்களை விடுவித்தாலும், அவர்களை மீண்டும் டிசம்பர் 19 ஏலத்தில் வாங்க முடியும். அதாவது, அதிக விலை கொண்ட முக்கிய வீரரை தற்போது விடுவித்து விட்டு, அவரை ஏலத்தில் குறைந்த விலைக்கு சிஎஸ்கே அணி வாங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அம்பதி ராயுடு
மேலே கூறப்பட்டுள்ள ஐந்து வீரர்களில் அம்பதி ராயுடு மட்டுமே மீண்டும் வாங்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜாதவ் தொடர்ந்து காயம் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார். தாக்குர் மோசமான பார்மில் இருக்கிறார். முரளி விஜய்க்கு அணியில் அதிக வாய்ப்பு கொடுக்க முடியாத நிலை தான் உள்ளது. சாம் பில்லிங்க்ஸ்-ஐ நீக்கி விட்டு வேறு இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை சிஎஸ்கே வாங்கும் என கூறப்படுகிறது.
|
தேதியால் குழப்பம்
சிஎஸ்கே அணியின் திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த அணி நவம்பர் 15 அன்று 5 வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என கூறி உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 14 அன்று கடைசி தேதி என்பதால் எப்படி இது சாத்தியம்? என்ற குழப்பம் உள்ளது.