ஐபிஎல் குறித்து அப்ரிடி
முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி, ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளதாகவும், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு முழுமுதல் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் வாய்ப்பளிக்கப்படும் இளம் வீரர்கள் சர்வதேச அளவில் நெருக்கடி இல்லாமல் விளையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் வெற்றி
ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் இளம் வீரர்கள், சர்வதேச அளவிலான வீரர்களுடன் இணைந்து மைதானத்தில் விளையாடுவதுடன் டிரஸ்ஸிங் அறையிலும் அவர்களுடன் சகஜமாக கலந்துரையாடுகிறார்கள். இதனால் அவர்களின் தயக்கங்கள் மற்றும் நெருக்கடிகள் மறைந்து சர்வதேச அளவிலான விளையாட்டுக்கு அவர்கள் முழுமையாக தயாராகிறார்கள் என்று அப்ரிடி கூறியுள்ளார்.
ஐபிஎல் & பிஎஸ்எல் சிறப்பு
இந்தியாவில் ஐபிஎல் செய்யும் மாயத்தை போலவே பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக்கும் செய்து வருவதாக அப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் மூலம் பல இளம் திறமைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச அளவிலான முன்னணி வீரர்களுடன் இணைந்து அதிகமான கூட்டத்திற்கிடையில் விளையாடும்போது இளம்வீரர்களின் நெருக்கடிகள் விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது சாத்தியமில்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இருதரப்பிலான போட்டிகள் நடத்தப்படுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.