காலி மைதானங்களில் போட்டிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் போட்டிகளை காலி மைதானங்களில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலி மைதானத்தில் நடத்த திட்டம்
கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கப்பட வேண்டிய ஐபிஎல் போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகளை ரத்து செய்தால் 5,000 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த தொடரை இந்த ஆண்டே நடத்தி முடிக்கவும் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
விருந்தாளிகள் இல்லாத திருமணங்கள்
இந்நிலையில், ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது, விருந்தாளிகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்களை போன்றது என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். விருந்தாளிகள் இல்லாமல் நீதிமன்றங்களில், காவல் நிலையங்களில் நடத்தப்படும் திருமணங்கள் எவ்வாறு ருசிக்காதோ, அதேபோல ரசிகர்கள் இல்லாத ஐபிஎல் போட்டிகளும் சுவாரஸ்யமாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேரலை கிரிக்கெட் முக்கியம்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் பூனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் போன்ற அணிகளில் பங்கேற்று விளையாடியுள்ள இர்பான் பதான், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள தற்போதைய சூழலில் ரசிகர்களுக்கு நேரலையில் நடைபெறும் கிரிக்கெட்டை கொடுப்பது முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.