டி20 உலக கோப்பை பாதிப்பு
இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் நுழைய செப்டம்பர் மாதம் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதால், 16 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
டி20 உலக கோப்பை குறித்து அறிவிப்பு
இந்நிலையில், இந்த தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள ஐசிசி பிரதிநிதிகள் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. டி20 உலக கோப்பை தள்ளிவைப்பு குறித்த அறிவிப்பையும் ஐசிசி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
பாட் கமின்ஸ் ஆதரவு
சர்வதேச அளவில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதிகமான பணப்புழக்கம் உள்ள ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், டி20 உலக கோப்பை தாமதமானால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தவது சரியாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
விளையாட காத்திருப்பு
ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கில் ரசிகர்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ள பாட் கமின்ஸ், கடந்த 10 வாரங்களாக வீட்டிற்குள் முடங்கியுள்ள வீரர்களுக்கு இந்த தொடர் சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த தொடரில் விளையாட தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.