டப்ளின்: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான், முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அயர்லாந்தை போராடி வெற்றிக்கொண்டது. முதல் இரண்டு நாட்கள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டாலும், மிச்சமிருந்த மூன்று நாட்களும் சிறப்பாக அமைந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அயர்லாந்தின் ஸ்விங் பௌலிங்கிற்கு ஈடுக்கொடுக்க முடியாமால் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது. அறிமுக வீரர்களான ஷதாப் கான் மற்றும் ஃபாஹீம் அஷ்ரப் ஆகியோர் அரை சதங்கள் குவித்ததன் மூலம் 300 ரன்களைக் கடந்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.
சுமார் 18 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் ஒரு தின ஆட்டங்களில் பங்கேற்றுவரும் அயர்லாந்து முதன்முறையாக பாகிஸ்தான் போன்ற திறமையான பவுலிங் அட்டாக்கை எப்படி எதிர்க்கொள்ளும் என்ற கேள்விக்கேற்றார்ப்போல முதல் இன்னிங்க்ஸில் 130 ரன்களில் ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் முறையில் பாகிஸ்தான் அயர்லாந்தை மீண்டும் ஆடுமாறு கேட்டுக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் அயர்லாந்தின் துவக்க வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் அளித்தது. மேலும், ஆடுகளமும் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. மூன்றாம் நாளின் ஆட்ட முடிவில் விக்கட் இழப்பின்றி ஜாய்ஸ்-போர்ட்டர்ஃபீல்ட் கூட்டணி ஐம்பது ரன்களை கடந்து டெஸ்ட் போட்டிக்கு தங்கள் அணி தயார் தான் என்று நிரூபித்தனர்.
நான்காம் நாளில் மீண்டும் ஒரு சின்ன சரிவை அயர்லாந்து சந்திக்க, அவ்வளவுதான் ஆட்டம் இன்றே முடிந்துவிடும் என்றெண்ணிய நேரத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணியை உலகக் கோப்பையில் ஓடவிட்ட கெவின் ஒ பிரைன் விஸ்வரூபம் எடுத்தார். தாம்ப்சனுடன் இணைந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது மட்டுமல்லாமல், தன்னுடைய அணியும் தானும் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த நான்காவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பவுர்களின் துணைக்கொண்டு, அணியின் 'லீடை' 150க்கு மேல் கொண்டுச்சென்ற பின்னர், ஐந்தாவது நாளில் ஆட வந்தவுடனேயே அவுட் ஆகி வெளியேறினார்.
160 ரன்கள் என்கிற இலக்கை நோக்கி பயணிக்கையில் ஆரம்பமே மூன்று விக்கட்டுகளை இழந்த நிலையில், அயர்லாந்தின் டெஸ்ட் வெற்றி சாத்தியமாகும் வேளையில், இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசம் ஜோடி அயர்லாந்தின் கனவைத் தகர்த்தது.
இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தங்களுடைய சுற்றுப்பயணத்தை வெற்றியோடு ஆரம்பித்தாலும், வியர்வை அதிகம் சிந்த வேண்டியிருந்தது. பாகிஸ்தான் அடுத்து இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. கெவின் ஒ பிரைன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.