தலைவலி கொடுத்த அக்தர்
இந்தப் போட்டியில் ஷோயப் அக்தர் எங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்தார். ஆரம்பத்தில் அவரது பந்து வீச்சால் நாங்கள் சற்றே தடுமாறினோம். நான் பேட் செய்ய வந்தபோது மறு முனையில் தோனி நின்றிருந்தார். ஷோயப் அக்தர் மணிக்கு 150 முதல் 160 கிலோமீட்டர் என்ற சீரான வேகத்தில் பந்துகளை பாய்ச்சிக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார் இர்பான் பதான்.
ரொம்ப மோசமா இருக்குய்யா
தோனியிடம் போய் எப்படி விக்கெட் இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர் பெருசா எதுவும் ஹெல்ப் பண்ணலை. உன்னால் முடிந்த அளவுக்கு பண்ணு என்று அட்வைஸ் கொடுத்தார். எனக்கு வந்த அக்தரின் முதல் பந்தே பவுன்சர். காதுக்கு அருகே பந்து பறந்து போனது. பந்தையே நான் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகம். தொடர்ந்து பவுன்சர்களை சரமாரியாக போட்டார் அக்தர். சமாளித்தேன் என்று கூறியுள்ளார்.
கண்டு கொள்ளவில்லை
முதல்ல பார்ட்னர்ஷிப்பை போடுவோம்.. பிறகு அடிப்போம் என்ற முடிவில் நானும் தோனியும் இருந்தோம். எனவே நிதானித்தோம். இடையில் சில பந்து வீச்சாளர்கள் வந்தனர். நாங்கள் சாலிடாகி விட்டோம். பிறகு மீண்டும் வந்தார் அக்தர். எங்களை சீண்டியபடியே இருந்தார் அக்தர். எங்களது பார்ட்னர்ஷிப்பை காலி செய்வதே அவரது நோக்கம் என்பதால் நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தோம். ஆனால் ஓவராகப் போய்க் கொண்டிருந்தார் அக்தர் என்று மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார் பதான்.
ரைட்டு சொல்லிய தோனி
உடனே நான் தோனியிடம் போய், நான் அக்தரை ஸ்லட்ஜ் செய்யப் போகிறேன்.. நீங்க பார்த்து சிரிங்க என்று கூறினேன். ரைட்டு என்று 'தல'யும் பச்சைக் கொடி காட்டினார். ஆனால் நேரத்தைப் பாருங்க.. இப்போது அக்தர் வீசிய பந்தெல்லாம் ரிவர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பித்தது. அவர் முதல்ல போட்ட பந்துகளே பரவாயில்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவை அபாயகரமாக வந்தன என்றார்.
நீ ரொம்பப் பேசறே
ஆனால் நான் விடவில்லை. அக்தரைப் பார்த்து முடிஞ்சா அடுத்தடுத்த பந்தையும் இதே வேகத்தில் போடுங்க பார்ப்போம் என்று சீண்டினேன். அதைக் கேட்டு கடுப்பான அக்தர், நீ ரொம்ப பேசுறே. அடுத்த பந்திலேயே நீ காலி என்று சவால் விட்டார். அதைக் கேட்ட நான்.. நானும் பதான்தான்.. உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. முடிஞ்சா பண்ணிப் பாரு என்று பதில் சவால் விட்டேன்.. அவ்வளவுதான் காண்டாகி விட்டார் அக்தர் என்று கூறினார்.
பேசிப் பேசியே காலி செய்தோம்
அடுத்த பந்து பவுன்சராக வந்தது. நான் ரெடியாகவே இருந்தேன். விட்டுட்டேன். அடுத்து ஷார்ட் பால் போட ஆரம்பித்தார். நானும் விடவில்லை. தலைவா.. இன்னும் ஷார்ட்டா பந்தைப் போடுங்க என்று கிண்டலடிக்கவே ரொம்பக் கோபமாகி விட்டார் அக்தர். அந்த கேப்புக்குள் நாங்கள் அக்தர் பந்துகளை விளையாட பழகி விட்டோம். அடுத்து வந்த பந்துகளை சமாளிப்பது எளிதாக மாறியது. பிறகென்ன ரன் விருந்துதான். அந்த போட்டியில் நாங்கள் ஆடிய ஆட்டத்தால் போட்டி டிராவில் போய் முடிந்தது என்று கூறினார் இர்பான் பதான்.