தடுமாறி வருகிறார்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெற இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் வெல்ல வேண்டும். அதற்கு விராட் கோலி ரோகித் சர்மா புஜாரா போன்றோர் தங்களது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டு விளையாட வேண்டும். ஆனால் இந்திய அணியின் முக்கிய தூணாக பார்க்கப்படும் விராட் கோலி கடந்த சில காலமாக சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்.
சுழற்பந்துவீச்சு குறை
தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் கூட விராட் கோலி மிச்செல் சாண்ட்னர் பந்தில் தொடர்ந்து ஆட்டம் இழந்தார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் விராட் கோலி எவ்வாறு விளையாடுவார் என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விராட் கோலிக்கு சுழற் பந்துவீச்சை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து இர்பான் பதான் ஒரு யோசனையை கூறியுள்ளார். ஒரு விஷயம் மட்டும் விராட் கோலி மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆபத்து
சுழல் பந்துவீச்சை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்பது குறித்து கோலி யோசித்து கொண்டு இருப்பார். ஏனென்றால் அவர் கடந்த சில காலமாக சுழற் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன், ஏஸ்டன் ஏகார் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது அவர்கள் பந்து வெளியே செல்லும் வகையில் வீசுவார்கள். அப்போது பந்து நன்றாக பவுன்சும் ஆகும் இதன் மூலம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக வாய்ப்பு இருக்கிறது .
அதிரடி காட்டுங்கள்
இதை மனதில் வைத்துக் கொண்டு விராட் கோலி விளையாட வேண்டும். சுழற் பந்துவீச்சை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் விராட் கோலி ஒரு விஷயத்தை செய்தால் போதும். நாம் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் விராட் கோலி சுழற் பந்து வீழ்ச்சிக்கு எதிராக கொஞ்சம் அதிரடியாக ஆடினால் அவரால் ரன் குவிக்க முடியும்.
ஸ்ட்ரைக் ரேட் முக்கியம்
அதே சமயம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியும் தர முடியும். இதனை விராட் கோலி செய்வார் என நான் நம்புகிறேன். ஏனென்றால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக குறைந்து கொண்டே வருகிறது. இதனை அவர் சரி செய்தாலே அனைத்தும் சரியாகிடும் என இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.