அறிமுகம் எப்போது?
2003ஆம் ஆண்டு ஆல் - ரவுண்டரான இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அவரது வேகப் பந்துவீச்சின் தாக்கம் காரணமாகவே அப்போது பரபரப்பாக பேசப்பட்டார்.
அண்டர் 19 அணி ஆட்டம்
அண்டர் 19 அணியில் கலக்கிய அவர், நேரடியாக இந்திய அணியில் இடம் பிடித்தார். 2003இல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்தார். 2012ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற்று வந்தார் இர்பான் பதான்.
மறக்க முடியாத தருணங்கள்
டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்தது, 2007 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்கியது ஆகியவை அவரது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத தருணங்கள்.
விக்கெட்கள்
இர்பான் பதான் 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்கள், 120 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்கள், 24 டி20 போட்டிகளில் 28 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். மொத்தமாக 301 சர்வதேச விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
பேட்டிங் சராசரி
பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கை கொடுத்த இர்பான் பதான் டெஸ்ட் போட்டியில் 31.57 சராசரி, ஒருநாள் போட்டியில் 23.39 சராசரி, டி20 போட்டியில் 24.57 சராசரி வைத்துள்ளார்.
வேகத்தை இழந்தார்.
சிறந்த ஆல் - ரவுண்டராக, அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்த பதான், 2000த்தின் பிற்பகுதியில் பந்துவீச்சில் தன் வேகத்தை இழந்தார். அதனால், அவரது ஸ்விங் செய்யும் வித்தையும் பாதிக்கப்பட்டது.
உள்ளூர் போட்டிகள்
அதன் பின் 2012ஆம் ஆண்டில் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார். அதன் பின் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த அவர், அதிலும் மெதுவாக தன் பழைய ஆட்டத்தை இழந்தார்.
ஐபிஎல் வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் 2017ஆம் ஆண்டில் தன் கடைசி ஆட்டத்தை ஆடிய அவர், அதன் பின் நடந்த ஐபிஎல் ஏலங்களில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. 2020 ஐபிஎல் ஏலத்தில் அவர் தன் பெயரை அளிக்கவில்லை.
ஜம்மு - காஷ்மீர் அணி
பரோடா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த பதான், கடந்த ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடி வந்தார். அந்த அணியின் ஆலோசகராகவும் விளங்கினார். இந்த நிலையில் தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டார்.
ஓய்வு அறிவிப்பு
வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், "பதான் தி ஸ்விங் கிங்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.