இர்பான் பதான்
இர்பான் பதான் கங்குலியால் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது ஸ்விங் பந்துவீச்சில் இந்தியா பின்தங்கி இருந்த நிலையில், இர்பான் பதான் அதில் திறமையான பந்துவீச்சாளராக விளங்கினார். பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
2007 டி20 உலகக்கோப்பை
2007 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கூட அவர் தான் ஆட்ட நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
ஸ்விங் பந்துவீச்சு
2007க்குப் பின் அவரால் பந்தை சரியாக ஸ்விங் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதே சமயம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பும் குறைந்து போனது. பேட்டிங்கிலும் அவர் அணிக்கு கை கொடுத்த போதும் பல தொடர்களில் மாற்று வீரராக மட்டுமே வெளியில் அமர்ந்து இருந்த அவர் பின் அணியில் இருந்தே நீக்கப்பட்டார்.
இர்பான் பதான் பேட்டி
இது பற்றி அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "சில வீரர்களுக்கு ஆதரவு கிடைக்கும். சில வீரர்களுக்கு கிடைக்காது. சிலர் அதிர்ஷ்டசாலிகள், சிலர் துரதிர்ஷ்டசாலிகள். நான் துரதிர்ஷ்டசாலிகளின் வரிசையில் இருப்பவன்" எனக் கூறினார்.
பந்துவீச்சு மாற்றம்
சிலர் பதான் இனி ஸ்விங் செய்ய முடியாது என்றார்கள். நான் தாக்குதல் பாணியில் பந்து வீச விரும்பினால், என் கேப்டன் என்னை ரன்களை கட்டுப்படுத்துமாறு கூறுகிறார். அப்படி என்றால் நான் பல்வேறு வகையான மாறுதல்கள் மற்றும் கட்டர்களை பயன்படுத்த வேண்டும் என தன் ஸ்விங் பந்துவீச்சு மாற்றம் பற்றி விளக்கம் அளித்தார்.
ஆதரவு இல்லை
தான் ஸ்விங் வீச விரும்பினாலும், அணியின் தேவைக்கு ஏற்ப மாற்றி பந்து வீச நேர்ந்தது. அப்போது தான் அந்த மாற்றத்துக்கு தயாராகி வந்த போது தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என தன் நிலைப்பாடு குறித்து விளக்கினார் இர்பான் பதான்.
கேள்வி கேட்டேன்
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 - 0 என வெற்றி பெற்ற நிலையிலும், மீதமுள்ள போட்டிகளில் தன்னை அணியில் சேர்க்கவில்லை என்றும், அப்போது பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் கேட்ட போது உன் பேட்டிங், பந்துவீச்சு எல்லாமே சிறப்பாக உள்ளது. ஆனாலும் சில விஷயங்கள் என் கையில் இல்லை எனக் கூறியதாகவும் பதான் தெரிவித்தார். அடுத்து 2008 ஆஸ்திரேலிய தொடருக்கு இடையே தோனி, பதான் சரியாக பந்து வீசவில்லை என ஊடகங்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின.
தோனி சொன்ன பதில்
அப்போது இர்பான் பதான் இது பற்றி தோனியிடம் விளக்கம் கேட்க சென்றதாகவும், அப்போது தோனி எல்லாமே திட்டப்படி நடப்பதாக கூறி அனுப்பியதாகவும் கூறினார். அது சரியான பதில் இல்லை என்ற நிலையில் தான் அதுபற்றி மீண்டும் தோனியிடம் கேள்வி எழுப்பவில்லை எனக் கூறினார் இர்பான் பதான்.
ஹூக்கா அடிக்கும் பழக்கம் இல்லை
தான் தோனியிடம் தனிப்பட்ட முறையில் தன்னை ஏன் அணியில் சேர்க்கவில்லை என தான் கேட்காதது பற்றி கூறிய போது, "எனக்கு ஒருவரின் அறைக்கு சென்று ஹூக்கா புகைக்கும் பழக்கம் இல்லை. அங்கே இதை பேசவும் இல்லை. எல்லோருக்கும் தெரியும். இதைப் பற்றி சில சமயம் பேசாமல் இருப்பது தான் நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை களத்தில் செயல்படுவது தான். அதில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தினேன்" என்றார் பதான்.
தோனியின் பழக்கம்
தோனிக்கு ஹூக்கா புகைக்கும் பழக்கம் உள்ளதாக சில வீரர்கள் கூறி உள்ளனர். அவர் இரவு நேரத்தில் அறையில் ஹூக்கா புகைப்பார் என்றும், அப்போது யார் வேண்டுமானாலும் அவரது அறைக்கு செல்லலாம் என்றும் கூறி உள்ளனர். அதைத் தான் குறிப்பிட்டு இர்பான் பதான் விளாசி இருக்கிறார்.