வீரர்கள் அனுபவம்
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் வீரர்கள் தங்கள் காலத்தில் நடந்த பல சுவாரசிய தகவல்களை கூறி வருகிறார்கள். சமீபத்தில் 2003-04 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றி இர்பான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பதான் சொன்ன விஷயம்
அப்போது தான் இர்பான் பதான் ஜாவேத் மியான்தத்தை நேரில் சந்தித்து, நியாயம் கேட்க வேண்டி தன் தந்தை இந்தியாவில் இருந்து கிளம்பி வந்த சம்பவத்தை பற்றி கூறினார். அப்போது மியான்தத் மிரண்டு போய் என்ன சொன்னார்? என்பது பற்றியும் கூறி உள்ளார்.
கார்கில் யுத்தம் நடந்த பின்..
2003-04 கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அதற்கு சில ஆண்டுகள் முன்பு தான் இந்தியா - பாகிஸ்தான் கார்கில் யுத்தம் நடந்து முடிந்து இருந்தது. அதனால், இரு நாடுகள் இடையே உறவில் பெரிய விரிசல் சரியாகி வந்தது.
இந்தியா வெற்றி
இந்த நிலையில், இந்திய அணி, பாகிஸ்தான் சென்றதால் பதற்றம், பரபரப்பு இருந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா ஒருநாள் தொடரை 3 - 2 எனவும், டெஸ்ட் தொடரை 2 - 1 எனவும் வென்றது. அந்த தொடரில் தான் சேவாக் முச்சதம் அடித்து இருந்தார்.
விமர்சனம்
அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார் ஜாவேத் மியான்தத். அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே விமர்சனம் செய்வார். இந்திய அணியில் அப்போது மிக இளம் வீரராக இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதானை விமர்சனம் செய்தார்.
மட்டமாக பேசிய மியான்தத்
பாகிஸ்தானில் ஒவ்வொரு தெருவிலும் இர்பான் பதான் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என அவரை மிகவும் மட்டமாக பேசி உள்ளார் ஜாவேத் மியான்தத். அதைப் படித்த இர்பான் பதான் தந்தை, அந்த மோசமான விமர்சனத்தால் எரிச்சல் அடைந்துள்ளார்.
பாகிஸ்தான் சென்றார்
கடைசி டெஸ்ட் போட்டி முடிந்த போது, இர்பான் பதான் தந்தை பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கே இர்பான் பதானை சந்தித்து, தான் பாகிஸ்தான் அணியின் அறைக்கு சென்று அங்கே ஜாவேத் மியான்தத்தை பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்.
போக வேண்டாம்
அவர் ஏன் அப்படி கேட்கிறார் என்பதை உணர்ந்த இர்பான் பதான், நீங்கள் அங்கே போக வேண்டாம் என கூறி உள்ளார். எனினும், பாகிஸ்தான் அறைக்கு சென்றுள்ளார் இர்பான் பதான் தந்தை. அவர் இந்த விஷயத்தை பற்றித் தான் கேட்க வருகிறார் என்பதை தெரிந்து வைத்திருந்தார் மியான்தத்.
மிரண்ட மியான்தத்
இர்பான் பதான் தந்தை அந்த அறைக்கு வந்த உடன் எழுந்து நின்று, "இல்லை.. நான் உங்கள் மகனை பற்றி எதுவும் கூறவில்லை" என பதான் தந்தை எதுவும் கேட்காமலேயே பதில் அளித்துள்ளார். அப்போது பதான் தந்தை நடந்து கொண்ட விதம் தான் உச்சகட்டம்.
புன்னகையுடன் நோஸ்கட்
மியான்தத் தாமாகவே விளக்கம் அளித்த போது, இர்பான் பதான் தந்தை புன்னகையுடன், "நான் உங்களிடம் எதையும் சொல்ல வரவில்லை. நீங்கள் மிகச் சிறந்த வீரர் என்பதால் உங்களை பார்க்க வந்துள்ளேன்" என கூறி இருக்கிறார்.