மோசமான ஆண்டு
கடந்த 2020ம் ஆண்டு வரை சிறப்பாக ஆடி வந்த ஐதராபாத் அணி, இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பியது. குறிப்பாக பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர். டெஸ்ட் போட்டி போன்று ஆடியதே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதே போல பந்துவீச்சிலும் எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டி.நடராஜனும் காயம் காரணமாக வெளியேறியது பின்னடைவானது.
அணிக்குள் குழப்பம்
வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகத்திற்கும் கேப்டன் டேவிட் வார்னருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். எனினும் அவர் கேப்டனாக செயல்பட்ட ஒரு போட்டியிலும் அந்த அணி படுதோல்வியடைந்தது.
என்ன பிரச்னை
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இர்பான் பதான், என் மனதில் டாப் 4 அணிகளில் ஐதராபாத் இருந்தது. ஆனால் அவர்களின் ஆட்டம் அதிர்ச்சியளித்தது. அணியின் பெரிய பிரச்னையாக டேவிட் வார்னரின் கேப்டன்சி இருந்தது. அவர் அணியை கையாண்ட விதம் மற்றும் பேட்டிங் செய்த விதம் மிக மோசமாக இருந்தது. கேன் வில்லியம்சன் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்டார். டேவிட் வார்னரின் மீது அந்த அணி அதிருப்தியில் இருந்தது என்பதற்கு இதுவே சான்று
மிடில் ஆர்டர் சரியில்லை
அந்த அணியின் மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்கள் இல்லை என்பது முக்கிய குறை. அவர்கள் சிறப்பான ப்ளேயிங் 11 ஐ உருவாக்க வேண்டும். அதே போல தொடர்ச்சியாக 140 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய வீரர்கள் அந்த அணிக்கு கண்டிப்பாக தேவை. புவனேஷ்வர் குமார் சில போட்டிகளில் இல்லை, நடராஜன் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இதுவே அந்த அணியின் சொதப்பலுக்கு காரணம் என பதான் தெரிவித்துள்ளார்.