இளம் வீரர்களுக்கு போட்டி
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் பங்கேற்ற 8 அணிகளும் தங்களிடம் கையிருப்பில் இருந்த தொகையுடன் வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இதில் மூத்த வீரர்களை காட்டிலும் இளம் திறமைகளுக்கு அதிக போட்டி காணப்பட்டது.
அடிப்படை விலை ரூ.1 கோடி
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட யூசுப் பதான், எந்த அணியினராலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அவரது அடிப்படை விலையாக ஒரு கோடி ரூபாய் இருந்த நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் விருப்பம் காட்டவில்லை.
10 போட்டிகளில் 40 ரன்கள்
கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய யூசுப் பதான், 10 போட்டிகளில் விளையாடி வெறும் 40 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆல்-ரவுண்டரான இவர், அதிகமாக அடித்த ரன்னே ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் மட்டுமே. இதன் சராசரி 13.33. இதேபோல விக்கெட் எடுக்காமல் 6 பந்துகள் மட்டுமே வீசினார்.
அரைசதம் கூட இல்லை
இதேபோல கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 15 போட்டிகளில் விளையாடிய யூசுப், 260 ரன்கள் அடித்து சராசரியாக 28.88ஐ பெற்றிருந்தார். இந்த தொடரிலும் ஒரு அரைசதத்தையும் அவர் அடிக்கவில்லை.
7 வீரர்களை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ்
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் 5 ஆல்-ரவுண்டர்கள் உள்பட ஏழு வீரர்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. விராட் சிங், பிரியம் கார்க், அப்துல் சமத், சஞ்சய் யாதவ் மற்றும் பவனகா சந்தீப் ஆகிய இளம் வீரர்களை சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
|
அண்ணனை தேற்றிய இர்பான்
யூசுப் பதான் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில் தன்னுடைய அண்ணனுக்கு இர்பான் பதான் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறிய தடைக்கற்கள் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்காது என்று தெரிவித்துள்ள இர்பான், யூசுப் ஒரு வெற்றியாளர் என்றும் அவரை தான் எப்போதுமே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.