34 லட்சம் மக்கள் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி, உலக மக்களை வீட்டுக்குள் முடங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி உள்ளனர்.
இந்தியா கடும் பாதிப்பு
இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
குஜராத் நிலை
இந்தியாவில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக குஜராத் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். குஜராத் தலைநகர் அஹ்மதாபாத் மோசமான பாதிக்கப்பட்டுள்ளது.
அஹ்மதாபாத் பாதிப்பு
அஹ்மதாபாத் நகரில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அடுத்ததாக சூரத் மற்றும் வதோதரா நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வதோதராவில் வசித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
இலவச பொருட்கள்
துவக்கத்தில் ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை இலவசமாக அளித்த அவர்கள், பின்னர் உணவுப் பொருட்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து தற்போது வதோதரா காவல்துறைக்கு வித்தியாசமான உதவி ஒன்றை செய்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உதவும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதற்காக வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, நெல்லிக்காய், உள்ளிட்டவற்றை அதிகம் உட்கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.
பரவும் அபாயம்
இந்த நிலையில், காவல்துறையினர் எப்போதும் வெளியே ரோந்துப் பணிகளில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. அதனால் அவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரைகளை வழங்கி உள்ளனர் பதான் சகோதரர்கள்.
நன்றி சொன்ன காவல்துறை
வதோதரா நகர கமிஷனர் அனுபம் சிங் கஹ்லாட்-இடம் தாங்கள் எடுத்து வந்த மாத்திரைகளை பதான் சகோதரர்கள் வழங்கினர். அதற்கு நன்றி தெரிவித்து வதோதரா காவல்துறை ட்வீட் வெளியிட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் வகையில், யூசுப் பதான், இர்பான் பதான் இருவரும் காவல்துறை செயல்பாட்டை பாராட்டி உள்ளனர்.