பெரும் கேள்வி
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற போது, அதன் எதிர்காலம் குறித்த கேள்வி தான் ரசிகர்களிடையே அதிகம் எழுந்துள்ளது. நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய எம்.எஸ்.தோனி, அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் பங்குபெறுவேன். ஆனால் சிஎஸ்கே அணியின் வீரராக இருப்பேனா என்பது கூறமுடியாது. 2 புதிய அணிகளின் வகையால், சிஎஸ்கே அணியின் நலனை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் எனக்கூறினார்.
சிஎஸ்கேவின் ப்ளான்
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில் குறிப்பிட்ட அளவிற்கு தான் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைக்க முடியும். அதன்படி தோனிக்கு தற்போதே 40 வயது ஆகிவிட்டதால், அவரை தக்கவைப்பது சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் தோனி தற்போது ஆலோசகராக செயல்படுவதே சிறந்தது என பலரும் கருதுகின்றனர். இதனால் சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டனையும் மெகா ஏலத்தில் எடுக்கும் எனத் தெரிகிறது.
சிஎஸ்கே கேப்டனாக வார்னர்
இந்நிலையில் தோனியின் இடத்திற்கு டேவிட் வார்னர் செயல்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாக தெரிகிறது. டேவிட் வார்னர் கடந்த சில ஆண்டுகளாக ஐதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தார். 2016ம் ஆண்டு கோப்பையையும் வென்றுக் கொடுத்தார். ஆனால் இந்தாண்டு அவருக்கு மோசமாக இருந்தது. அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ப்ளேயிங் 11 மற்றும் டக் அவுட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வார்னர் வெளியிட்ட புகைப்படம்
ஐதராபாத் அணியில் இனி என்னை பார்க்க முடியாது என வார்னர் ஏற்கனவே மறைமுகமாக தெரிவித்துவிட்டார். எனவே அவரை வாங்குவதற்கு பல அணிகள் போட்டி போட்டு வருகின்றன. அதற்கேற்றார் போல வார்னர் நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். சிஎஸ்கே ஜெர்ஸியில் வார்னர் தனது மகளை தூக்கி நின்றுக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் அது. இதனை பதிவிட்டவுடனே சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பமடைந்தனர். மேலும் வார்னரும் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டார்.
மறைமுக அறிவிப்பு
இதற்கு விளக்கம் அளித்த அவர், என்னுடைய ரசிகர் ஒருவர் நான் சிஎஸ்கே உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை அனுப்பி பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தான் நான் இதை செய்தேன் எனத் தெரிவித்திருந்தார். எனினும், தான் சிஎஸ்கே அணியில் இணையப்போவதை வார்னர் மறைமுகமாக அறிவித்துவிட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர். வார்னர் அதிக அனுபவம் கொண்டவர். தோனிக்கு பிறகு சிஎஸ்கேவை வழிநடத்த அவருக்கு தக்க அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.