எதிரணியில் தோனி
இந்த நிலையில் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்று தன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றில் தோனி சிஎஸ்கே அணியை விட்டு விலகி, எதிரணியில் இணைய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு இருந்தது.
ட்விட்டரில் பரபரப்பு
அந்த செய்தியால் நேற்று ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது. தோனி ரசிகர்கள் இது உண்மையா? என கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது அந்த செய்திக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தது சிஎஸ்கே அணி. அதன் பின்னரே அந்த பரபரப்பு அடங்கியது.
இந்திய அணியில் வாய்ப்பு
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி இந்திய அணியில் ஆடவில்லை. அவர் விடுப்பில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தோனி எப்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புவார் என்ற கேள்வி உள்ளது.
2020 ஐபிஎல் உறுதி
இதற்கிடையே, 2020 ஐபிஎல் தொடரில் தோனி கேப்டனாக ஆட உள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதியாக தெரிவித்தது. அதன் பின் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆடுவதை வைத்து இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.
2021 ஐபிஎல் முடிவு
இந்த நிலையில், தோனி 2021 ஐபிஎல் தொடர் வரை ஆட இருப்பதாக சிஎஸ்கே அணியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின. அதன் மூலம் தோனி அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஓய்வு முடிவை அறிவிக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்தனர் ரசிகர்கள்.
தோனி என்ன சொன்னார்?
சிஎஸ்கே அணியிடம் இது பற்றி பேசிய போது, தன்னை 2021 ஐபிஎல் தொடருக்கு முன் அணியில் தக்க வைக்காமல், ஏலத்தில் விடுமாறும், அதன் பின் ஏலத்தில் தன்னை குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் கூறி இருக்கிறார் தோனி.
சிஎஸ்கே உறுதி
ஆனால், சிஎஸ்கே அணி பணத்தை விட தோனி தான் முக்கியம் என்ற முடிவில், அப்படி எல்லாம் செய்யப் போவதில்லை என கூறி விட்டதாகவும் தகவல்கள் கூறப்பட்டன. இந்த செய்திகள் வெளியான நிலையில் தான் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது.
வெளியான செய்தி
அந்த செய்தியில் 2௦21 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை விட்டு விலகி, தோனி எதிரணியில் சேரலாம் என்ற ரீதியில் கூறப்பட்டு இருந்தது, அந்த செய்தி ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே பதிலடி
இந்த செய்திக்கு பதிலடி கொடுக்க நினைத்த சிஎஸ்கே அணி, ட்விட்டரில் கேலியாக ஒரு பதிலை கூறி இருந்தது. ரிபப்ளிக் டிவியின் பிரபல வாசகமான "நாட்டுக்கு தெரியும் (Nation Knows)" என்பதையே பதிலாக கூறி இருந்தது.
தோனி எங்கேயும் போக மாட்டார்
தோனி சிஎஸ்கே அணியை விட்டு எங்கேயும் போக மாட்டார் என்பதை குறிக்கும் வகையிலும், செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் வேடிக்கையான பதிலை கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது சிஎஸ்கே அணி.