ஐபிஎல் விதிமுறை
இந்த முறை ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற முறையில் வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் 2 உள்நாட்டு வீரர் மற்றும் 2 அயல்நாட்டு வீரர் என்ற முறையில் தக்கவைத்துக்கொள்ளலாம். இதனால் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மும்பை அணி திட்டம்
குறிப்பாக ஐபிஎல்-ல் 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தனது நீண்ட கால வீரர்களை இழக்கவுள்ளது. அந்த அணி முதன்மை தேர்வாக கேப்டன் ரோகித் சர்மாவை தக்கவைக்கவுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். 3வது இடத்தில் இஷான் கிஷானும் 4வது வீரராக கெயீரன் பொல்லார்ட்-ம் தக்கவைக்கப்படவுள்ளனர்.
கழட்டிவிடப்படும் பாண்ட்யா
இதில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோர் கழட்டிவிடப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் சற்று மோசமாக உள்ளது. அவர் பவுலிங் செய்யாமலேயே இருப்பதால் இந்த முறை அவரை அணியில் இருந்து நீக்க மும்பை அணி தயாராக இருப்பதாக தெரிகிறது. இதே நிலைமை தான் அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவுக்கும் ஏற்பட்டுள்ளது.
புதிய அணி தீவிரம்
இந்நிலையில் பாண்ட்யா சகோதரர்களை, அகமதாபாத் அணி ஏலம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணி ஒருவேளை அவர்களை வெளியேற்றினால் தங்களது அணிக்கு வரவேண்டும் என பேச்சுவார்த்தையே அகமதாபாத் அணி நடத்திவிட்டதாக தெரிகிறது. இதே போல மும்பை அணி ஏலத்தில் விடும் வீரர்களை சிரமப்பட்டாவது மீண்டும் வாங்கிவிட முயற்சிக்கும் எனக்கூறப்படுகிறது.