கேப்டன் காலி
அதன்பிறகு, கசிந்த செய்திகள்... பஞ்சாப் அணியின் கேப்டன் பதவி காலியாக போகிறது? ராகுல் கேப்டனாக்கப்படுவார்? அஸ்வின் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்பது தான். இதில் இந்த 2 விஷயங்களே அஸ்வின் ஆட்டம் முடிவுக்கு வருவது போன்ற சில பிரச்சாரங்களை முன் எடுத்து வைத்துள்ளன.
சாதனைகள்
முதலில் வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை. சரி.. ஏன் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கு அஸ்வினின் சாதனை பதிவுகள் சில இருக்கின்றன. 2016ம் ஆண்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்தது.
தொடர் நாயகன்
அஸ்வின் அந்த தொடரின் நாயகனானார். 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் அவர் அடித்த 4 சதங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரானவை. 4 சதங்கள், 552 ரன்கள், 60 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 33 வயதான அஸ்வின் 65 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
காரணம் கோலியா?
ஆனால், இந்த சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும், முதல் டெஸ்டில் கழற்றி விடப்பட்டுள்ளார். காரணம் கோலி.. அவர் கைகாட்டும் ஜடேஜாவும், குல்தீப் யாதவ்வும் தான் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். ஜடேஜாவுக்கு வயது 30, குல்தீப்புக்கு 25, இளைஞர் பட்டாளம் போதும் என்று நினைத்துவிட்டார் கோலி.
சாஸ்திரி சொன்னது என்ன?
சில நாட்களுக்கு முன்பு அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குல்தீப் யாதவ் சுழற்பந்துக்கு சிறந்த பவுலர் என்று கூறினார். ஹர்பஜன் சிங்கும் சமீபத்திய பேட்டியில், சோதனையின் அடிப்படையில் அஸ்வினை விட குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பவுலர் என்று கூறினார். (ஒரு காலத்தில் ஹர்பஜனுக்கு பதிலாக இந்திய அணியில் எடுக்கப்பட்டவர் அஸ்வின்... அதனால் திருப்பி தாக்குகிறார் என்று சொல்லலாம்)
2 ஆண்டு கேப்டன்
இது டெஸ்ட் கதை என்றால்... பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்பது மற்றொரு செய்தி. அஸ்வின் 2 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின் இதுவரை ஐபிஎல் தொடரில் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முடிவு எப்படி?
பஞ்சாப் அணி நிர்வாகம் வரும் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் அஸ்வினை கேப்டன் பதவியில் இருந்து நீக்க உள்ளது. காரணம், கடந்த தொடரில் பஞ்சாப் லீக் சுற்றுடன் வெளியேறியது. அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டால் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு சில உதாரணங்களும் முன் வைக்கப்பட்டன. டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டதும் அந்த அணி சிறப்பாக ஆடியது. ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஸ்மித் நியமித்த பிறகு வெளுத்து கட்டியது.
புது கேப்டன் வருவார்?
அதனை போன்றே தற்போது பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமித்தால் அணி சிறப்பாக விளையாடும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இதனால் அஸ்வினுக்கு பதிலாக புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வருகிறது?
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சேர்க்கப்பட்டும், டெஸ்டில் இதுவரை விளையாட வில்லை. ஏற்கனவே ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் இல்லை (இதற்கு கோலி தான் காரணம் என்பது தனி), இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து கோவிந்தா என்ற தகவல்களால் கிட்டத்தட்ட அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கிரிக்கெட் விமர்சகர்களும், வல்லுநர்களும் கூறியிருக்கின்றனர்.