ஒரு கோப்பை கூட
ஆம்! விராட் கோலியின் அடையாளமே அக்ரெஸ்ஸிவ் தான். ஆக்ரோஷம் கொப்பளிக்கும். துணிந்து முடிவெடுக்கும் குணம் உடையவர். எதுவாக இருந்தாலும் போட்டுப் பார்த்துவிடலாம் என்று நினைப்பவர். எல்லாம் ஓ.கே. தான். ஆனால், ரிசல்ட்? ஒவ்வொரு முறையும் ஐசிசியின் மிக முக்கியமான தொடர்களில் அரையிறுதிப் போட்டியிலோ, இறுதிப் போட்டியிலோ தோற்றுக் கொண்டே இருக்கிறோமே. ஏன் நம்மால் அதற்கு இன்னும் எண்டு கார்டு போட முடியவில்லை? 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்க ஆரம்பித்த நமது பயணம், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு முக்கிய கோப்பையை கூட நாம் வெல்லவில்லை.
தோனி ஓய்வு
விராட் கோலியின் அக்ரெஸ்ஸிவ் அவருக்கு எவ்வளவு பலமோ, அதை விட 10 சதவிகிதம் அதுவே அவருக்கு எதிராக அமைகிறது. 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி, அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தோனி கேப்டன். முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி. மூன்றாவது போட்டி டிராவாக, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் தோனி. இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, தோனியின் இந்த முடிவு அணி நிர்வாகத்துக்கே அதிர்ச்சியை கொடுக்க, முதன் முறையாக கேப்டன் பதவியேற்கிறார் விராட் கோலி
எச்சரித்த எக்ஸ்பெர்ட்ஸ்
சிட்னியில் நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 572 ரன்கள் குவிக்க, இந்தியா பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் 475 ரன்கள் சேர்த்தது. கேப்டனான முதல் போட்டியிலேயே 147 ரன்கள் குவித்தார் விராட் கோலி. பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ய, இந்தியாவுக்கு 349 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு முழுதாக ஒரு நாள் கையில் இருந்தது. ஆனால், கோலியோ 'டார்கெட் சேஸ்' செய்வது என்று முடிவெடுத்தார். 349 ரன்களை சேஸிங் எப்படியாவது சேஸிங் செய்துவிட வேண்டும் என்பதே அணிக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன். ஆனால், எக்ஸ்பெர்ட்ஸோ 'இது மிகவும் ரிஸ்க்' , 'ஆபத்தான முடிவு' , 'இந்த டார்கெட்டை அவ்வளவு வலிமையான ஆஸ்திரேலிய பவுலிங்கை எதிர்த்து, அதுவும் அவர்களது மண்ணில் அடிக்க முடியாது.. டிரா செய்வதே புத்திசாலித்தனமான முடிவு' என்று எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை விடுத்ததில் தோனியும் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், கடைசி டெஸ்ட் போட்டிக்கு அவர் அணிக்கு ஆலோசனை கொடுக்க தவறவில்லை.
தப்பிப்பிழைத்த இந்தியா
எக்ஸ்பிரஸ்ட் சொல்லும் அனைத்தையும் யாரும் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அப்படி கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது. ஆனால், நாம் எங்கு விளையாடுகிறோம், எந்த அணிக்கு எதிராக விளையாடுகிறோம், நமது பலம் என்ன என்பதை ஆராய்ந்து தான் ஒரு கேப்டன் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கோலி 'முடிந்தவரை போட்டுப் பார்க்கலாம்; என்று துணிந்து முடிவெடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீராக சரிந்து கொண்டிருந்தன. ஒருக்கட்டத்தில் 5 விக்கெட்டுகள் சரிய, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் நினைத்தனர். பிறகு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்து 7 வீரர்களை இந்திய அணி இழக்க, ஆட்டம் இன்னும் சிறிது நேரத்தில் முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஒருவழியாக, போராடி டிரா செய்தது இந்திய அணி.
30 - 50 ரன்கள் கூடுதலாக
இப்போதும் அதே விராட் கோலியை தான் பார்க்க முடிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கடைசி நாளில் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி எடுத்த 'அதிரடி' எனும் வியூகம் தான் பெரும் பின்னடைவாக அமைந்தது. கோலி, ரஹானே, ஜடேஜா என்று அனைவரும் வரிசையாக பெவிலியன் திரும்ப, கடைசி வரை ரிஷப் பண்ட்டால் அடிக்கவே முடியவில்லை. அந்த செஷனில் மட்டும் இந்தியா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் இப்போட்டியை டிரா செய்திருக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொறுமையாக விளையாடினாலும் விக்கெட் விழ வாய்ப்பிருக்கிறதே என்ற கேள்வியையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அட்லீஸ்ட் இன்னும் 30 - 50 ரன்கள் அதிகமாக அடித்திருக்கலாம். அது இந்தியாவுக்கு போட்டியை டிரா செய்ய சாதகமாக கூட அமைந்திருக்கலாம்.
இது கிரிக்கெட்
இப்போதும் நாம் விராட் கோலியின் 'அக்ரெஸ்ஸிவ்' முடிவை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அதை எங்கு, எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத் தான் அவர் யோசிக்க வேண்டும். அணி எப்போதும் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பதைவிட, தோல்வியை தவிர்ப்பது எப்படி என்று யோசிப்பதில் தான் ஒரு கேப்டனின் சக்ஸஸ் ரேட் அடங்கியிருக்கிறது. இது கிரிக்கெட். எப்போது வேண்டுமானாலும் மேஜிக் நிகழலாம். ஆனால், இங்கு நாம் தீர்மானிக்கும் எந்த ஸ்டிராடஜியையும் அப்படியே களத்தில் நிகழ்த்திக்காட்டிவிட முடியாது.