சொதப்பும் சிஎஸ்கே
ஐபிஎல்லின் இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில், சொதப்பலான ஆட்டத்தையே ரசிகர்களுக்கு வழங்கியது சிஎஸ்கே.
ரசிகர்கள் ஏக்கம்
ஆயினும் இதுவரை அனைத்து சீசன்களிலும் பிளே-ஆப் சுற்றுவரை எளிதாக நுழைந்துள்ள சிஎஸ்கே, இந்த முறையும் எப்படியாவது பிளே-ஆப்பில் நுழைந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பிளே-ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாகவும் கனவாகவும் உள்ளது.
4 லீக் போட்டிகளில் வெல்ல வேண்டும்
இந்நிலையில், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னமும் சிஎஸ்கேவிற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனிவரும் 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றிற்கு அந்த அணி முன்னேற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டியதும் அவசியம். அதற்கு தேவை சிறப்பான போட்டிகள் மற்றும் சிறப்பான கேப்டன்ஷிப் மட்டுமே.
இறுதி இடத்தில் சிஎஸ்கே
நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்றதன்மூலம் சிஎஸ்கே ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இனிவரும் தங்களது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சிஎஸ்கேவின் பிளே-ஆப் கனவும் நனவாகும்.
மேஜிக் நடைபெற வேண்டும்
அடுத்தடுத்து நிலைகளில் உள்ள சன்ரைசர்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே 12 புள்ளிகள் அதிகரிக்காமல் தொடர்ந்தால் சிஎஸ்கே பிளே-ஆப்பிற்கு முன்னேறலாம். மேஜிக் போன்று இவையெல்லாம் நடைபெற்றால் சிஎஸ்கே பிளே-ஆப் செல்ல முடியும்.