தோனி ஓய்வு
தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக பரவலாக கூறப்பட்டது. எனினும், தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். தோனி ரசிகர்கள் அவர் ஓய்வு பெறக் கூடாது என வேண்டுகோள் வைத்து வந்தனர்.
தற்காலிக ஓய்வு
இந்த நிலையில், தோனி தற்காலிகமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்களில் தோனி இடம் பெறவில்லை. அவராகவே இரண்டு மாத கால ஓய்வில் இருப்பதாக கூறியது பிசிசிஐ.
வதந்திகள் வந்தாலும் அமைதி
இது ஒருபுறம் என்றால் தோனி ஓய்வு பெறப் போகிறார் என சில நாட்கள் முன்பு சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அப்போதும் கூட தோனி தன் ஓய்வு முடிவு என்ன என்பது பற்றி அறிவிக்கவில்லை.
இது தான் காரணம்
அவரது அமைதிக்குப் பின் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் இருக்கிறார் என்கிறார்கள். தோனிக்கு பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என ரிஷப் பண்ட் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ரிஷப் பண்ட் சொதப்பல்
எனினும், அவர் இதுவரை தன்னை நிரூபிக்கும் வகையிலும், தொடர்ந்து தன்னால் ரன் குவிக்க முடியும் என்றும் அவர் நிரூபிக்கவில்லை. உலகக்கோப்பைக்கு பின் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தாலும், அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து, மொத்தமாக 10 இன்னிங்க்ஸ்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
டி20 செயல்பாடு
ஐபிஎல் போட்டிகளில் கலக்கும் ரிஷப் பண்ட், 19 சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு முறை மட்டுமே 30க்கும் அதிகமாக ரன் சேர்த்துள்ளார். இந்திய அணி அடுத்து 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில், பண்ட்டின் செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
வேறு விக்கெட் கீப்பர்கள்
அவருக்கு மாற்றாக வேறு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களது செயல்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகக்கோப்பை தொடருக்கு முன் அவர்கள் தயாராக வேண்டும்.
டி20 உலகக்கோப்பை
அதனால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு யார் விக்கெட் கீப்பர் என தெரியாத சூழ்நிலை உள்ளது. அதை மனதில் கொண்டே தோனி இதுவரை ஓய்வை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
தோனி வருவார்
இந்த தகவல் உண்மை என்றால், ரிஷப் பண்ட் அல்லது வேறு எந்த விக்கெட் கீப்பரும் சரியாக ஆடாத பட்சத்தில், இந்திய அணி நிர்வாகம் தோனியை மீண்டும் அணிக்கு அழைக்க வாய்ப்புள்ளது.
அடுத்த ஐபிஎல்
அடுத்த ஐபிஎல் தொடரின் போது இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரிய வரும். தோனி நிச்சயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கூறி உள்ளது. விரைவில் ரிஷப் பண்ட் தன்னை நிரூபிப்பாரா?