இஷான் கிஷான் அதிரடி
தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் நான் இருக்கிறேன் என பொறுப்பை உணர்ந்து ஆடிய இஷான் கிஷான் வங்கதேச பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தார். 85 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்த இஷான் கிஷான், அடுத்த 18 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். அப்போதாவது அவரின் ஆட்டம் அடங்குமா என பார்த்தால், வெறும் 126 பந்துகளில் இரட்டை சதத்தை அடித்து அனைவரையும் வாயைப்பிளக்க வைத்தார்.
4வது இந்தியர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் 4வது இந்திய வீரர் இஷான் கிஷான் ஆகும். இதற்கு முன்னர் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர். இதே போல உலகளவில் 7வது வீரர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றார்.
கெயிலின் ரெக்கார்ட் தகர்ப்பு
இந்நிலையில் கிறிஸ் கெயிலின் உலக சாதனையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இருந்தார். 2015ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 138 பந்துகளில் 200 ரன்களை அடித்தார். மொத்தமாக 215 ரன்களை அப்போது அடித்திருந்தார். ஆனால் இஷான் கிஷான் இன்று வெறும் 126 பந்துகளில் 200 ரன்களை அடித்து நொறுக்கினார்.
ஷேன் வாட்சனின் ரெக்கார்ட்
வங்கதேச மண்ணில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ஷேன் வாட்சன் வைத்திருந்தார். அவர் 2011ம் ஆண்டு 185* ரன்களை அடித்திருந்தார். இஷான் அதனை முந்தியுள்ளார். இதே போல அயல்நாடுகளில் அதிக ரன்களை அடித்த இந்திய ஓப்பனராக கங்குலி இருந்திருந்தார். 1999ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 183 ரன்களை அடித்தார். இஷான் இன்று அதனையும் முறியடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.