கம்பேக் கொல்கத்தா
ஐபிஎல் 2021 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, டெல்லி அணிகள் ஏறக்குறைய தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியாக பெங்களூரு ஓரளவு வலிமையாக பிளே ஆஃப் நுழைய ரெடியாகி வருகிறது. இந்த நான்காவது இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல்-ன் முதல் லெக்கில் மகா மட்டமாக விளையாடிய கொல்கத்தா, இரண்டாவது லெக்கில் நம்ப முடியாத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய பலம் வாய்ந்த அணிகளை பந்தாடிய கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மட்டும் தோற்றது. அதுவும், பரபரப்பான கடைசி பந்தில் தோற்றது.
மும்பை - பஞ்சாப்
இப்போது நான்காவது இடத்தில் 10 புள்ளிகளுடன் உள்ளது கேகேஆர். ராஜஸ்தான், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள், 8 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேஸில் நுழைய தீவிரமாக உள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், இரண்டாவது போட்டியில், மும்பை - பஞ்சாப் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, பவுலிங்கை தேர்வு செய்ய, பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
டி20 வேர்ல்டு கப் அணி
இதில், மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சௌரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆடம் மில்னேவுக்கு பதில் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். இதில், இஷான் கிஷன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மிக முக்கிய வீரராவார். அதுவும், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான், இந்திய அணியில் நீக்கப்பட, அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டனர் இஷான். ஆனால், அவரது பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. இதனால், இன்றைய போட்டியில் அவரை அணியில் இருந்தே தூக்கும் நிலைமை வந்துவிட்டது.
அணித் தேர்வு கேள்விக்குறி
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், இஷான் கிஷன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் சௌரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார். இது இந்திய அணியின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேர்ல்டு கப் பிளேயிங் லெவனில், இஷான் கிஷன் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மும்பை அணியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா என்று உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட பல முக்கிய வீரர்கள் அனைவரும் மிக மோசமாக ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் நிலையில், இஷான் கிஷன் நீக்கம், பிசிசிஐ-யின் அணித் தேர்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது.