முதல் போட்டியில் வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டியிலேயே 3 முறை கோப்பை வெற்றியாளர் சிஎஸ்கேவுடன் மோதியது கடந்த சீசனின் ரன்னர்-அப்பான டெல்லி கேபிடல்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய வெற்றிக் கணக்கையும் துவக்கியது. ஆனால் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டுள்ளது.
டெல்லியின் திணறலான பௌலிங்
முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியால் 147 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்த இலக்கை தன்னுடைய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் எளிதாக அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியை வெற்றியிலிருந்து தள்ளி வைக்க முயற்சித்து திணறலான பௌலிங்கை வெளிப்படுத்தி தோற்றது டெல்லி கேபிடல்ஸ்.
பௌலர்கள் சொதப்பல்
கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தை மனதில் வைத்து நேற்றைய போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே அளித்தது. இந்த போட்டியின் தோல்விக்கு அதிகமான ரன்களை அள்ளிக் கொடுத்த அந்த அணியின் பௌலர்கள் மற்றும் பனிப்பொழிவு ஆகியவற்றை காரணமாக தெரிவித்துள்ளார் அணியின் கோச் ரிக்கி பாண்டிங்.
குதிகால் காயம் காரணம்
மேலும் அணியின் நட்சத்திர பௌலர் இஷாந்த் சர்மா குதிகாலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே கடந்த இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் அவருடைய குணமடைதலுக்காக அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
டெல்லி அணியின் ஹீரோ
இந்நிலையில் அவர் இல்லாத கடந்த இரு போட்டிகளின் ஹீரோவாக மாறியுள்ளார் ஆவேஷ் கான். கடந்த சில வருடங்களாக அவர் அணியில் இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் தற்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை கற்பூரமாய் அவர் பற்றிக் கொண்டுள்ளதாகவும் பாண்டிங் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவர் அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக மாறியுள்ளதாகவும் பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.