எங்கே இஷாந்த்?
நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இஷாந்த் எட்டு ஓவர்கள் தான் பந்து வீசினார். அதன் பின் அவர் மைதானத்தில் இருந்த உடை மாற்றும் அறைக்குள் சென்று விட்டார். அதன் பின் அவர் பந்து வீசவில்லை. இஷாந்த் இல்லாத நிலையில் இந்தியா விக்கெட் வீழ்த்த முடியாமல், திணறியது. அந்த நேரத்தில் அலஸ்டர் குக், ஜோ ரூட் இணை ரன்களை குவித்து வந்தது.
என்ன ஆனது?
இஷாந்த் சர்மாவுக்கு நேற்று வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதால் உள்ளே சென்றுவிட்டார். அலஸ்டர் குக்கை இந்த டெஸ்ட் தொடரில் அதிக முறை வீழ்த்திய அவர் இல்லாததால், எந்த அச்சுறுத்தலும் இன்றி ஆடிய குக் எளிதாக சதம் அடித்தார். மறுபுறம் ஜோ ரூட்டும் நன்றாக ஆட இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது இந்த விஷயம்.
காப்பாற்றிய விஹாரி
இதையடுத்து பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரான ஹனுமா விஹாரியிடம் நீண்ட நேரத்திற்கு பின் கோலி பந்தை கொடுத்தார். அந்த சமயத்தில் குக், ரூட் இருவரும் சதம் அடித்து அதன் பின்னும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். விஹாரி தன் சுழலில் இரண்டு பேரையும் அடுத்தடுத்து அனுப்பி வைத்தார். ஆனால், இங்கிலாந்து 300 ரன்கள் முன்னிலை நோக்கி நகர்ந்து இருந்தது.
அனுபவ இஷாந்த்
இஷாந்த் சர்மாவின் அருமை நேற்று நன்றாக உணரப்பட்டது என்பதுதான் உண்மை. அவர் இந்த தொடரில் 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். மேலும் இந்தியாவில் அதிக அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் இவர் தான். அடுத்ததாக, புவனேஸ்வர் குமார் இருக்கிறார். ஆனால், அவரும் இந்த தொடரில் ஆடவில்லை.