இஷாந்த் சர்மா துவக்கம்
இஷாந்த் சர்மா 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியில் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் அனில் கும்ப்ளே தலைமையிலும், தோனி தலைமையிலும் இந்திய அணியில் ஆடினார்.
நான்கு கேப்டன்கள்
தற்போது விராட் கோலி தலைமையில் டெஸ்ட் அணியின் மூத்த வீரராக ஆடி வருகிறார். தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் நான்கு கேப்டன்களின் கீழ் ஆடி இருக்கிறார் இஷாந்த் சர்மா.
முக்கிய பங்கு
இந்திய வேகப் பந்துவீச்சின் அசுர வளர்ச்சியில் தானும் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறார். 2007 முதல் 2015 வரை இருந்த இஷாந்த் சர்மாவுக்கும், அதன் பின் இருக்கும் இஷாந்த் சர்மாவுக்கும் பெரிய மாறுதல் உண்டு.
மூத்த வீரர் இவர் தான்
இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் திறமையுடன் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்த வேளையில், தானும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். தற்போது இருக்கும் இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் இஷாந்த் சர்மா தான்.
உண்மையை கூறினார்
சில ஆண்டுகள் முன்பு வரை சுமாராக இருந்த இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள், சமீப காலமாக எப்படி உலக அளவில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களாக மாறினார்கள் என்பது பற்றிய உண்மையை கூறி இருக்கிறார்.
தோனி கேப்டன்சியில்..
தோனி கேப்டன்சியின் போது வேகப் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தியதும், அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்ததாகவும், கோலி காலத்தில் குறைந்த அளவிலான வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறி மாற்றத்துக்கான உண்மையை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
சுழற்சி முறை
"தோனியின் காலத்தில், எங்களில் சிலர் (வேகப் பந்துவீச்சாளர்கள்) அதிக அனுபவம் இன்றி இருந்தோம். அதே சமயம், வேகப் பந்துவீச்சாளர்களை அதிகம் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டார்கள். ஒரு கூட்டணியாக எங்களால் நிலையான தன்மையை அடைய முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் இஷாந்த் சர்மா.
அதிக தொடர்பு
"3 - 4 வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பது எங்களிடையே தொடர்பை அதிகப்படுத்துகிறது. முன்பு, இது ஆறு அல்லது ஏழு பந்துவீச்சாளர்கள் குழுவாக இருந்தது. அப்போது அதிக தொடர்பு இல்லை" என்றார் இஷாந்த் சர்மா.
அனுபவம்
மேலும், "விராட் கேப்டன்சியை ஏற்ற போது, நாங்கள் அனைவரும் ஓரளவு அனுபவம் பெற்று இருந்தோம். அது எங்களுக்கு உதவியது" என்று விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஆடுவதை பற்றி கூறினார் இஷாந்த்.
அதிக நேரம்
"இப்போது அதிகமாக விளையாடும்போது, குடும்பத்துடன் இருப்பதை விட, டிரஸ்ஸிங் அறையில் அதிக நேரம் செலவிடுகிறோம். இங்கே விவாதங்கள் வெளிப்படையாக இருக்கும். பின்னர், விளையாட செல்லும்போது அனுபவித்து ஆடலாம். அது வேறு உணர்வு" என்று இஷாந்த் கூறினார்.