இஷாந்த் சர்மாவிற்கு தசைப்பிடிப்பு
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் விளையாடிவரும் இஷாந்த் சர்மா, இதுவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்று விளையாடியுள்ளார். அதிலும் அவர் விக்கெட்டுகள் எதையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 7ம் தேதி பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதியுற்றார்.
ஐபிஎல்லிருந்து வெளியேற்றம்
இந்நிலையில் அவருடைய தசைவலி மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர்ந்து 6 முதல் 7 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், அவர் ஐபிஎல் தொடரிலிருந்தே வெளியேறுவதாகவும் அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறப்பாக விளையாடிவரும் அந்த அணிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா ஏமாற்றம் அளித்துள்ளார்.
இஷாந்த் பங்கேற்பு கேள்விக்குறி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் தன்னுடைய தனித்துவமான பௌலிங்கின்மூலம் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர் இஷாந்த் சர்மா. இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இஷாந்த் பங்கேற்பு?
முதலில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் பங்கேற்பது கடினம். ஆயினும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியில் உடல்நிலை தேறும் பட்சத்தில் இஷாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஷாந்திற்கு மாற்று
இந்த தொடருக்கான அணி வரும் 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சைனியும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி போட்டிகளையொட்டி இந்த தேர்வு நடைபெறும்.