2016ல் இறுதி ஒருநாள் போட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய பௌலராக விளங்கி வருபவர் இஷாந்த் சர்மா. இவர் கடந்த 2016 ஜனவரியில் தன்னுடைய இறுதி ஒருநாள் போட்டியை விளையாடினார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இதுவரை 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இஷாந்த் சர்மா, இதன் சராசரியாக 30.98ஐ பெற்றுள்ளார்.
பங்கேற்க இஷாந்த் சர்மா ஆர்வம்
இந்நிலையில், தான் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற தனது ஆவலை இஷாந்த் சர்மா வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் உலக கோப்பை தொடரின் வெற்றிக் கூட்டணியில் தான் இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகமாக கவனிக்கப்படுகிறது
ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இணையான டெஸ்ட் போட்டிகளின் உலக சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடினாலும், அது மற்றவர்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் ஆனால் ஒருநாள் உலக கோப்பை தொடர் மற்றவர்களால் அதிகமாக கவனிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். வீடியோகாஸ்ட் நிகழ்ச்சியில் தீப்தாஸ் குப்தாவுடன் உரையாடிய இஷாந்த் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.
விக்கெட்டுகளை வீழ்த்துவதே முக்கியம்
இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, 300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகளே எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், ஆவரேஜ், ஸ்டிரைக் ரேட் போன்ற நம்பர்களில் தனக்கு எந்த அக்கறையும் இல்லை என்றும் கேப்டனுக்கு தேவையான அளவில் பௌலிங் போடுவதும், விக்கெட்டுகளை வீழ்த்துவதும் தான் தன்னுடைய அக்கறையாக உள்ளதாகவும் இஷாந்த் குறிப்பிட்டார்.