ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 81வது நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடக்கிறது.
நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தை டிராவில் முடித்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி, 17 புள்ளிகளோடு பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. எஃப்சி கோவாவுக்கு எதிரான தன்னுடைய கடந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்ற ஹைதராபாத் எஃப்சியோ, தற்சமயம் 6 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
ஹைதராபாத் எஃப்சி 16 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்துள்ள நிலையில், மோசமான அணி என்னும் பெயர் எடுப்பதை தடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். கோல்களை இது வரை எதிரணியினருக்கு வாரி வழங்கியுள்ளது அந்த அணியின் கோச் ஜேவியர் லோபஸ்ஸுக்கு வருத்தம் தரக் கூடிய விஷயமாக இருக்கும். சமீபத்தில், ஹைதராபாத் எஃப்சி, சவ்விக் சக்ரபர்த்தி மற்றும் ஹிதேஷ் ஷர்மா ஆகிய வீரர்களை அணியில் சேர்த்தது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இரியாண்டோ தனது அணியினரிடம் இருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளார். செர்ஜியோ காஸ்டல், நோவ் அகோஸ்டா, டேவிட் கிராண்ட் மற்றும் ஆய்ட்டர் மன்ரோய் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இந்த ஆட்டத்தை பற்றி ஜேவியர் லோபஸ் கூறுகையில், "இது எங்களுடைய சொந்த மண்ணில் இந்த சீசனில் எங்கள் அணியின் கடைசி ஆட்டமாகும். எனவே இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. கடந்த ஆட்டத்தில் எங்கள் ஆட்டம் சிறப்பாக இல்லை தான். எங்கள் ஆதரவாளர்களுக்காகவும், உரிமையாளர்களுக்காகவும் மூன்று புள்ளிகளை எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். அவர்களை ஏமாற்ற மாட்டோம் என நம்புகிறோம். அணியினரிடயே நம்பிக்கை நிலவுகிறது," என்கிறார்.
இரியாண்டோ பேசுகையில், "எப்படியாவது நாங்கள் வென்றே தீர வேண்டும். டாப் நான்கில் ஒன்றாக எங்களால் இடம் பெற முடியாது தான். இருந்தாலும், எங்களின் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் அளிப்போம்" என்கிறார்.
ISL 2019-20 : 5 கோல் அடித்து மும்பை சிட்டிக்கு மரண அடி கொடுத்த கோவா!
நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான தங்களுடைய கடந்த ஆட்டத்தை (3-3 கோல் கணக்கில் சமன்) குறித்து பேசிய இரியாண்டோ, "அது ஒரு சுவாரசியமான ஆட்டம். அனுபவம் பெற்ற வீரர்கள் அணியில் இல்லாமல் இருக்கும் போது இவ்வாறு நடப்பது சகஜம் தான். எங்களுடைய இளம் வீரர்கள் தற்போது தான் தங்களை மெருகேற்றி கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள்," என்றார்.
Photos Courtesy : ISL Media