கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே மோகன் பகான் - சென்னையின் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இரண்டாம் பாதி முடிவடைந்த பின் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தான் கோல் அடிக்கப்பட்டது.
ஏடிகே மோகன் பகான் அணியின் டேவிட் வில்லியம்ஸ் அந்த கோலை அடித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் ஏடிகே மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்தியது. சென்னையின் எஃப்சி, கோல் அடிக்கவிடாமல் தடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் முட்டி மோதின. மாற்று வீரர்களை இறக்கி போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தன. அந்த மாற்றம் ஏடிகே மோகன் பகான் அணிக்கு வேலை செய்தது.
அந்த அணி டேவிட் வில்லியம்ஸ்-ஐ 67வது நிமிடத்தில் களமிறக்கி இருந்தது. அவர் துடிப்பாக செயல்பட்டு கடைசி 10 நிமிட கூடுதல் நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.
ஆட்ட நேர முடிவில் ஏடிகே மோகன் பகான் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது. கடந்த இரு போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் தவித்த ஏடிகே, இந்தப் போட்டியில் அந்தக் குறையைப் போக்கியது.
ஏடிகே மோகன் பகான் 24 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி 15 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.