சிறப்பான ஐபிஎல்
ஐபிஎல் 2020 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் அதற்கென தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மற்ற சீசன்களை போலல்லாமல் இந்த சீசன் மிகவும் சிறப்பாக அமையும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோப்பையை கைப்பற்ற ஆவல்
இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களும் இந்த சீசனை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதால் இது மிகப்பெரிய ஐபிஎல் தொடர் என்றும் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் மற்ற அணிகளை போலவே இந்த தொடரின் கோப்பையை கைப்பற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மக்கள் மனதில் இயல்புநிலை
ஐபிஎல்லின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் பேசிய உத்தப்பா, மீண்டும் போட்டிகளில் விளையாடுவது உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீசன் மக்கள் மனதில் இயல்புநிலையை கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல எதிர்காலம்
இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிவீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பான வீரர் என்றும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் இந்திய அணியில் சிறப்பான இடத்தை பெறமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.