நன்கொடை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த வாரங்களில் பரவிய காட்டுத்தீக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமான ஹெக்டேர் கணக்கில் காடுகள் அழிந்துள்ளன. இந்த காட்டுத்தீக்கு சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நன்கொடை கிரிக்கெட் நடத்தப்பட்டது.
பரபரப்பான கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி 10 ஓவர்களுக்கு நடத்தப்பட்டது. ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் என இருவரின் தலைமையில் இரண்டு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்று அந்த அணியை வெற்றிபெற செய்தார். முன்னாள் வீரர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த போட்டி பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
முதல் பந்திலேயே பவுண்டரி
இந்த நன்கொடை போட்டியின்போது இடையில் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டரும் இந்த ஆண்டிற்கான பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்றுள்ள எல்லீஸ் பெர்ரி, சச்சினை ஒரு ஓவருக்கு ஆட கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது பௌலிங்கில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். 5 ஆண்டுகளாக பேட்டை தொடாமல் இருந்த சச்சின் டெண்டுல்கர் இதன்மூலம் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தன்னை பிரதிபலிப்பதாக கருத்து
இந்த போட்டிக்காக கடந்த வெள்ளிக்கிழமையே ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர், செய்தியாளர்களிடம் காட்டுத்தீ, ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். லாபுசாக்னே குறித்து பேசும்போது, அவரது பந்தை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவை தன்னை அப்படியே பிரதிபலிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.
லாபுசாக்னே நெகிழ்ச்சி
இந்நிலையில் தன்னை குறித்து சச்சின் டெண்டுல்கரின் கருத்து தன்னை உருக செய்துள்ளதாக லாபுசாக்னே தெரிவித்துள்ளார். சச்சின் போன்ற ஒரு சிறந்த வீரரின் வாயிலிருந்து இத்தகைய கமெண்ட் வந்திருப்பதற்கு தான் நன்றி கடன் பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.