சிறப்பான செயல்பாடு
தற்போது நடைபெற்றுவரும் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் கேரள அணியை சிறப்பாக வழிநடத்தி கவனம் பெற்றுள்ளார் இளம் வீரர் சஞ்சு சாம்சன். இதையடுத்து தற்போது அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்
வரும் 11ம் தேதி ஐபிஎல் 2021 தொடரின் ஏலம் நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்றைய தினம் ஐபிஎல்லின் 8 அணிகளும் தங்களது அணிகளில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன் நியமனம்
இதையடுத்து அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரராக இருந்தபோதிலும் அவர்மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் இது மிகப்பெரிய கவுரவம் என்று சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் உருக்கம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது இதயத்திற்கு நெருக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் 2021 தொடர் துவங்குவதற்காக தான் காத்திருப்பதாகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.