அணியில் தோனி
ஓய்வு முடிவு ஒருபுறம் என்றால், இந்திய அணியில் தோனிக்கு இடம் உண்டா என்பதும் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. சிலர் தோனி அணியில் இடம் பெற்றாலும் களமிறங்க வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். சிலர் ரிஷப் பந்த் தான் அடுத்த விக்கெட் கீப்பர், தோனி இடம் பெற்றாலும் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது எனவும் கூறுகிறார்கள்.
குழப்பத்தில் தேர்வுக் குழு
இன்னும் சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக் குழு உள்ளது. ஆனால், தோனி என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதனால், அவரை அணியில் சேர்ப்பதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளது.
சேவாக் யோசனை
இந்த நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் வீரர் சேவாக், தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரிடமே விட்டு விட வேண்டும். தேர்வாளர்களின் கடமை, தோனி இனி இந்தியாவின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பார்க்கப்படவில்லை என்பதை தெரிவிப்பது மட்டுமே என கூறினார்.
குற்றச்சாட்டு
இதே போல, நான் அணியில் இருந்து விலக்கப்பட்ட போதும் கூட அவர்கள் என்னிடம் பேசி இருக்கலாம் என்றார் சேவாக். இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்த போது, அப்போதைய தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டில் விவாதத்தில் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். அவர் அதற்கு பதிலும் அளித்தார். சேவாக் நீக்கப்பட்ட போது, தங்கள் குழுவில் இடம் பெற்று இருந்த விக்ரம் ரத்தோர் அவரிடம் பேசியதாக குறிப்பிட்டார்.
முன்பே கேட்க வேண்டும்
சேவாக் இதற்கு பதில் அளித்த போது விக்ரம் ரத்தோர் நான் நீக்கப்பட்ட பின்னர் தான் பேசினார். நீக்கப்படும் முன்பே பேசி இருந்தால் அதில் அர்த்தம் உள்ளது என்று வாதம் செய்தார். தோனி பற்றி பேசப் போய், சேவாக் அதிரடியாக தன் மனதில் இருந்த நீண்ட நாள் குமுறலை கொட்டி விட்டார்.