3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடந்த 3வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற நிலையில், அது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
முதல் சர்வதேச போட்டி
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடத்தப்பட்ட முதல் சர்வதேச போட்டி இது. இந்நிலையில், இந்த போட்டி ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்த போட்டி இரண்டு தினங்களிலேயே முடிக்கப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகம்
இந்நிலையில் வரும் 4ம் தேதி அதே மைதானத்தில் இரு அணிகளுக்கிடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. அந்த போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும் என்று பிசிசிஐ தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ஸ்கோர்களை குவிப்பார்கள் என்றும் கூறியுள்ளது.
பிட்ச் குறித்து முடிவு
நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில், பிட்ச் குறித்து இங்கிலாந்து அணி இதுவரை அதிகாரப்பூர்மாக எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ள பிசிசிஐ, 4வது போட்டியும் நடைபெற்று முடிந்தவுடன் பிட்ச் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.