4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3வது போட்டி நடைபெற்ற அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
நடந்ததை அறிய விரும்புகிறோம்
இந்நிலையில் பிட்ச் குறித்து தாங்கள் குறை கூறவில்லை என்றும் மாறாக கடந்த போட்டி எவ்வாறு 2 நாட்களில் முடிக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்தால் அடுத்த போட்டியை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர் ஜாக் லீச் கூறியுள்ளார்.
சிறப்பாக விளையாட யோசனை
மேலும் இங்கிலாந்து வீரர்களை காட்டிலும் மீடியாவில் பிட்ச் குறித்து அதிகமாக பேசப்படுவதாகவும் ஆனால் தற்போது தாங்கள் அதுகுறித்தெல்லாம் யோசிக்காமல் எவ்வாறு 4வது போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்று யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
விஷயங்களை கற்க விருப்பம்
கடந்த 3 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜாக் லீச். இந்நிலையில் பிட்ச் குறித்து தான் பேச எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் ஆனால் தான் நெருக்கடி சூழல்களிலும் புதிய விஷயங்களை கற்கவே விரும்புவதாகவும் லீச் கூறியுள்ளார்.
18 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள்
கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி 112 மற்றும் 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டி 2 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் ரவி அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இருவரும் இணைந்து 18 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.