சுழற் பந்துவீச்சு
கிரிக்கெட் உலகில் சுழற் பந்துவீச்சு அதன் சிறந்த காலத்தை இழந்து விட்டதாக பொதுவாக ஒரு விமர்சனம் உள்ளது. முன்பு டெஸ்ட் போட்டிகள் அதன் சிறந்த நிலையில் இருந்த போது, சுழற் பந்துவீச்சு போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருந்தது.
ஜாம்பவான்கள்
அந்த காலகட்டத்தில் தான் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே உள்ளிட்ட ஜாம்பவான்கள் தோன்றினர். அவர்கள் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களிலும் இன்று வரை உள்ளனர்.
ஆடுகளம் மாற்றம்
அவர்கள் காலத்திற்குப் பின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளங்கள் முடிவு கிடைக்க வேண்டி மாற்றி அமைக்கப்படுகின்றன. அதுவும் சுழற் பந்துவீச்சு அதன் சிறப்பை இழக்க முக்கிய காரணம். தற்போது டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர்களை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளனர்.
உலகின் சிறந்த வீரர்கள்
அவர்களில் முதன்மையான சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் மற்றும் இந்தியாவின் அஸ்வின். அவர்களைத் தவிர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்ற அணிகளில் நிரந்தர சுழற் பந்துவீச்சாளர் என யாரையும் கூற முடியாத நிலையே உள்ளது.
திலிப் தோஷி விமர்சனம்
இந்த நிலையில் தான் இந்திய அணியில் ஆடிய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் திலிப் தோஷி சுழற் பந்துவீச்சின் இன்றைய நிலையை குறித்தும், இந்திய அணியின் ஜடேஜா, அஸ்வின் குறித்தும் பேசி உள்ளார். சுழற் பந்துவீச்சு அழிந்து வருகிறது என சொல்ல முடியாவிட்டாலும், மோசமான நிலையில் இருப்பதாக கூறினார்.
நாதன் லியோன்
சுழற் பந்துவீச்சு உலகம் முழுவதும் மிக சுமாராக இருப்பதாக கூறிய திலிப் தோஷி, நவீன கால சுழற் பந்துவீச்சாளர்களில் நாதன் லியோன் மட்டுமே பாரம்பரிய முறையில் வீசுவதாகவும், சிறப்பான மன நிலையை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜடேஜா தான் சிறந்த ஸ்பின்னர்
இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா, அஸ்வின் என இரண்டு முன்னணி சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், ஜடேஜா தான் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என தான் நினைப்பதாக கூறி அதிர வைத்துள்ளார் முன்னாள் வீரர் திலிப் தோஷி.
அஸ்வின் முன்னேறவில்லை
அஸ்வின் கடந்த வருடங்களில் முன்னேறவில்லை. அவர் நிலையாக இருக்கிறார். ஆனால், அவர் தான் இருக்க வேண்டிய நிலைக்கு அவர், முன்னேறவில்லை. அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம் என கடும் விமர்சனத்தை முன் வைத்தார் அவர்.
என்ன செய்ய வேண்டும்?
மேலும், சுழற் பந்துவீச்சாளர்கள் தங்கள் அடிப்படை பந்துவீச்சை தான் பலப்படுத்த வேண்டும். சுழற் பந்துவீச்சு என்பது 98 சதவீதம் அடிப்படை சுழற் பந்துவீச்சு தான் எனக் கூறி புதிய முறையில் வீசப்படும் சுழற் பந்துவீச்சை குறித்து சுட்டிக் காட்டினார் திலிப்.
அஸ்வின்
அஸ்வின் தொடர்ந்து புதிய முறைகளை செயல்படுத்தி பார்ப்பார். அது தான் அவரது இயல்பான பந்துவீச்சை மாற்றி இருக்கிறது என்கிற ரீதியில் தான் திலிப் தோஷி விமர்சனம் செய்துள்ளார். டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வரும் அஸ்வின், அதிலும் நிலையான இடத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.