டிராவில் முடியுமா?
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியா போதே, ஒரு முன்முடிவுடன் களமிறங்கியது. பிட்ச்சில் சீமும், ஸ்விங்கும் இல்லாததால், முதல் நாளிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கால் அதிரடியாக விளையாடினர். டாப் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் அனைவரும் சதம் விளாச, முதல் நாளில் மட்டும் இங்கிலாந்து அணி 506 ரன்கள் அடித்து சாதித்தது. தொடர்ந்து இரண்டாம் நாளின் பாதியில் 657 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இங்கிலாந்து எடுத்த முடிவு
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியும் 579 ரன்கள் விளாச, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 35 ஒவர்களில் 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்களை விளாசி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி தவறான முடிவை எடுத்துவிட்டதோ என்ற விமர்சனங்களும், பேச்சுகளும் அதிகமாகின.
முன் நின்ற ஸ்டோக்ஸ்
ஆனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி கேப்டன் ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு சரி என்று சாதித்து காட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டிராவில் முடிய வேண்டிய ஆட்டத்தை வெற்றியின் பக்கம் திருப்பியுள்ளது. கேப்டன் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்ததோடு மட்டுமல்லாமல், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக பந்துவீச்சில் 12 ஓவர் ஸ்பெல்லை வீசிக் கொண்டிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்களை சரியாக வேலை வாங்கியதே இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அசாத்தியங்களை செய்யும் ஆண்டர்சன்
பாகிஸ்தான் ஆடுகளத்தில் 40 வயதில் முதல்முறையாக விளையாடும் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் சோர்ந்துவிடவில்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளார். 40 வயதில் விளையாடி வரும் ஆண்டர்சன் சீம், ஸ்விங், பேஸ் என்று எதுவும் இல்லாத தார்ரோடு பிட்ச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 24 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 40 வயதிலும் தன்னால் பங்களிக்க முடியும் என்று ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்.
ஏன் ஓய்வு பெற வேண்டும்?
ஒவ்வொரு முறை ஆண்டர்சனிடம் எப்போது ஓய்வு என்று கேட்கும் போதும், ஓய்வு பெறுவதற்கு எனக்கு சரியான காரணம் கிடைக்கவில்லை என்று நக்கலாக பதில் அளிப்பார். ஆனால் ஒரு விளையாட்டு வீரர் வயதாகிவிட்டது என்ற காரணத்திற்காக ஓய்வுபெற வேண்டுமா என்ன என்று கேள்வியையும் மறைமுகமாக கேட்டுள்ளார் என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் 40 வயதிலும் அசாத்தியங்களை படைக்க முடியும் என்றால், ஆண்டர்சன் இன்னும் சில ஆண்டுகள் கூட டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடலாம்.