இங்கிலாந்து அபார வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் இங்கிலாந்து அணியின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய காரணமாக பௌலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் விளங்கினார்.
தகர்த்த ஆன்டர்சன்
குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் இந்தியா வெற்றிக்கான முயற்சிகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கனவை தகர்த்தார் ஆன்டர்சன்.
வீரர்களுக்கு ரோல் மாடல்
இந்நிலையில் 38 வயதான நிலையிலும் தற்போதும் அவர் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அணியின் மற்ற வீரர்களுக்கு ரோல் மாடலாக விளங்கி வருவதாகவும் கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரராக ஆன்டர்சன் எப்போதும் விளங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்
முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜேம்ஸ் ஆன்டர்சன், ஒரே ஓவரில் சுப்மன் கில் மற்றும் அஜிங்க்யா ரஹானேவை வீழ்த்தி பாராட்டு பெற்றுள்ளார். 38 வயதான நிலையிலும் தொடர்ந்து தான் கிரிக்கெட்டில் கற்க வேண்டிய விஷயம் அதிகமாக உள்ளதாக ஆன்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.