சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் ஜேம்ஸ் பாட்டின்சன், அடிக்கடி மைதானத்தில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி அதன்மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்க சொந்தக்காரராக உள்ளார்.
தனிப்பட்ட துஷ்பிரயோகம்
கடந்த வாரத்தில் விக்டோரியா ஷெபீல்ட் ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடிய, பாட்டின்சன், பீல்டிங் செய்தபோது தனிப்பட்ட முறையில் வார்த்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை
ஜேம்ஸ் பாட்டின்சனின் இந்த செய்கை குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை என்றபோதிலும், அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானுக்கு எதிராக பிரிஸ்பேனில் வரும் வியாழனன்று துவங்கவுள்ள டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்க தடை விதித்துள்ளது.
இடைநீக்கம் செய்து உத்தரவு
கடந்த 18 மாதங்களில் இந்த சம்பவத்துடன் சேர்த்து பாட்டின்சன் இது போன்று 3 முறை விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த முறை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடுவர்களிடம் மன்னிப்பு
இந்நிலையில், தான் செய்த தவற்றை ஒப்புக்கொண்டதாக பாட்டின்சன் தெரிவித்துள்ளார். தன்னுடைய தவற்றை உணர்ந்து தான் உடனடியாக எதிரணியினர் மற்றும் நடுவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
லெவல் ஒன் மீறல்கள்
கடந்த மார்ச் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் அடுத்த வாரத்தில் அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் கருத்து வேறுபாட்டை காட்டியது என இருமுறை அவரது துஷ்பிரயோகம் கண்டறியப்பட்டது. ஆனால் இவை லெவல் ஒன் மீறல்கள் என வகைப்படுத்தப்பட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்பினார்.