வெரைட்டியாக மாறும்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய SENA நாடுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்றால், ரசிகர்களின் மிகப்பெரிய தீனி அதுவாகத்தான் இருக்கும். எகிறும் பந்துகள், மாறும் வானிலைகள், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ஷார்ட் பிட்ச் பந்துகள், டர்ன் என்று கணிக்க முடியா சூழல், நகரும் மேகங்களாக மாறும் போட்டிகளின் முடிவுகள் என்று ஆட்டம் ஒவ்வொரு செஷனிலும் வெரைட்டி வெரைட்டியாக இருக்கும்.
ஜீரணிக்க முடியாத
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், சுடச்சுட பிரியாணியில் ஆறிப்போன தக்காளி சாதம், லெமன் சாதம் என்று மிக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வு தான் இங்கிலாந்து தொடரில் பார்க்கும் நமக்கும் ஏற்படும், விளையாடும் வீரர்களுக்கும் ஏற்படும். அவ்வளவு கேவலமாவா இருக்கும்? என்று கேட்காதீர்கள். ஜீரணிக்க அவ்வளவு கடினமானதாக இருக்கும்.
லோகேஷ் ராகுல்
இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் அகர்வால் ஹெல்மெட்டை பதம்பார்க்க, அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "டிரன்ட்பிரிட்ஜில் வலைப்பயிற்சியி்ன்போது சிராஜ் வீசிய பந்து மாயங்க் ஹெல்மெட்டில் தாக்கியது. மருத்துவக் குழுவினர் அவருக்கு கன்கஸன் பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து மாயங்க் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருந்தாலும், உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய துணைக் கேப்டன் ரஹானே கூஒருகையில், "அணியில் உள்ள 21 வீரர்களும் நலமுடன், உடற்தகுதியுடன் விளையாடத் தயாராக உள்ளனர். விரைவில் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். மாயங்க் தற்போது வெளியேறி இருப்பதால், ரோஹித் ஷர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க அதிகம் வாய்ப்புள்ளது.
அஷ்வின்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட், ஆர் அஷ்வின், ஷர்துல் தாக்கூர்/ஆர் ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கிய ஜடேஜாவால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை என்பதால், இங்கிலாந்துக்கு எதிராக ஷர்துல் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயம், அஷ்வின் நிச்சயம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கங்குலி கூட அடிச்சதில்ல
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மிக முக்கிய பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் ரிஷப் பண்ட் குறித்து வியந்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த முறை நாங்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, ரிஷப் பண்ட் நான் வீசிய ஒரு புதிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து விளாசினார். இந்தியாவின் சவுரவ் கங்குலி கூட அப்படி அடித்து பார்த்திருக்க மாட்டீர்கள். எனினும், இது பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடிக்கவோ அல்லது அபாரமான ஷாட்களை விளையாடவோ பயப்படாத இந்த மாதிரி ஸ்டைலை நீங்கள் பெறும்போது, பந்துவீச்சாளர்களுக்கும் இது வித்தியாசமான சவாலாக உள்ளது" என்று இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்டுக்கு முன்னதாக நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆண்டர்சன் இவ்வாறு கூறினார்
தரமான பேட்ஸ்மேன்ஸ்
மேலும், "தலைமுறை கடந்து விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம். பல்வேறு தலைமுறையினருக்கு எதிராக விளையாடுவது ஒரு உண்மையான அனுபவமாக இருந்தது. ஐபிஎல் தலைமுறை வீரர்கள் பயமின்றி விளையாடும் அணுகுமுறையை நாம் பார்க்க முடிவதில்லை, எந்த வடிவத்திலும் சரி எந்த ஷாட்டையும் விளையாட அவர்கள் பயப்படவில்லை. இந்தியா மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது ஒரு எதிரணி வீரராக ஒரு பேட்ஸ்மேனை மட்டும் அவுட் செய்வதோடு உங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. ஏனென்றால் அந்த அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஒவ்வொரு விக்கெட்டும்
கோஹ்லி கேப்டனாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான விக்கெட் மற்றும் அணியில் அவருக்கு நேர்மறையான செல்வாக்கு உள்ளது. புஜாரா நீண்ட நேரம் கிரீஸில் நிற்கும் வீரர். எனவே அவரும் நிச்சயம் ஒரு முக்கியமான விக்கெட். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் அனைத்து வீரர்களுக்கும் எதிராக நாங்கள் ஒரு சிறந்த வியூகத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியம்" என்று ஆண்டர்சன் கூறினார்.