இன்றைய 54 போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 54வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் 4வது இடத்திற்கு முன்னேற ஜாம்ஷெட்பூர் அணி தீவிரம் காட்டி வருகிறது.
பெங்ளூரு அணியுடன் வெற்றி
ஜாம்ஷெட்பூர் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்சியை ஜாம்ஷெட்பூர் அணி வீழ்த்தியுள்ள நிலையில், அந்த வெற்றி கொடுத்துள்ள தன்னம்பிக்கையுடன் இன்றைய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை ஜாம்ஷெட்பூர் எதிர்கொள்ளவுள்ளது.
ஒரே கண்ணோட்டம்
இந்நிலையில், வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்று அந்த அணியின் கோச் ஓவன் கோய்ல் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியின் வெற்றியை மனதில் வைத்துக் கொணடால் அடுத்த வெற்றியை பெறுவது கடினமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவை வெற்றிகொள்ள தீவிரம்
இந்த மனப்பான்மை தங்களது அணி வீரர்களிடம் உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வெற்றி தோல்வி குறித்து யோசிக்காமல் நிலையான ஆட்டத்தை தங்களது அணி வீரர்கள் வெளிப்படுத்தி வருவதாகவும், இன்றைய கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதே மனநிலையில் வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜாம்ஷெட்பூர் -கேரளா பிளாஸ்டர்ஸ்
இந்நிலையில் கடந்த ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோச் கிபு விகுணா, தங்களது அணி ப்ளே-ஆப் சுற்றிற்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்களது அணி சிறப்பாக இந்த தொடரை துவங்கியுள்ளதாகவும் தொடர்ந்து நம்பிக்கையுடன் விளையாடி வருவதாகவும் அவர் கூறினார்.