பும்ராவுக்கு வந்த காயம்
இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த பும்ரா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். முதுகில் ஏற்பட்ட அழுத்த முறிவு காரணமாக பும்ரா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அதன்பின் ஆஸ்திரேலிய தொடருக்குள் வந்த அவருக்கு காயத்தின் தன்மை அதிகரித்ததால் டி20 உலகக்கோப்பையில் விளையாட முடியாமல் போனது.
பும்ராவுக்கு அதிர்ஷ்டம்
பொதுவாக அழுத்த முறிவு ஏற்பட்டு அதற்கு அறுவை சிகிச்சைகள் செய்துக்கொண்டால், அதில் இருந்து குணமடைய குறைந்தது 5 - 6 மாதங்கள் ஆகும். ஆனால் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை அளவிற்கு செல்லவில்லை என்பதால் வெகு சீக்கிரமாக குணமடைந்துவிடுவார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பும்ராவின் அறிவிப்பு
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பும்ரா இன்ஸ்டாகிராமில் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "நல்ல நேரங்கள் வரவிருக்கிறது" என்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்குள் கம்பேக் தரவுள்ளதை தான் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
எப்போது வருகிறார்?
தற்போது நியூசிலாந்து தொடரில் உள்ள இந்திய அணி, அடுத்ததாக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், இதற்கு அடுத்து நடக்கும் வீரர்கள் தேர்வில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.