முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தரவரிசையில் முதலிடம்
இந்திய அணியின் தவிர்க்க முடியாத பௌலராக உள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இவருக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டு இதனால் பாதிக்கப்பட்டார். முன்னதாக சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். மேலும் கொரோனா காரணமாகவும் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் அடைபட்டுள்ளார் பும்ரா.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் பௌலர் பாராட்டு
சமீபத்தில் முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப், ஜஸ்பிரீத் பும்ரா இந்த தலைமுறையின் சிறந்த திறமையான பௌலர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களை விட பும்ரா முற்றிலும் வித்தியாசமானவர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திறமை அவருக்கு எங்கிருந்து வந்தது என்று தான் வியப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிஸ் செய்வதாக பும்ரா ஏக்கம்
இந்நிலையில் மைதானத்தில் மேற்கொள்ளும் அதிகாலை நேரத்து பயிற்சிகளை தான் மிகவும் மிஸ் செய்வதாக ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பும்ரா, தன்னுடைய ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பும்ரா, விரைவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.