மும்பை அணி அபார வெற்றி
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் தகுதிச்சுற்று போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியின் ஹீரோக்களாக ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் இருந்தனர்.
பும்ரா 4 விக்கெட்டுகள்
அவர்கள் இருவரும் முறையே 4 மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை அணியை நேரடியாக இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளது. குறிப்பாக தான் போட்ட முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, மேலும் டெல்லியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் மற்றும் ஸ்டாய்னஸ் ஆகியோரையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.
சச்சின் பாராட்டு
இந்நிலையில் பும்ராவின் இந்த சாதனைக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பும்ரா மற்றும் போல்ட் இருவரும் தங்களது பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் வாழ்த்து
சிறப்பான யார்க்கர் மூலம் டெல்லியின் ஷிகர் தவானை பும்ரா வீழ்த்தியுள்ளதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் பௌலர் இயான் பிஷப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் பும்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஐபிஎல் டிவிட்டரில் வாழ்த்து
இதனிடையே பும்ராவின் சிறப்பான பௌலிங்கால் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதாக ஐசிசியும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. பும்ரா ஐபிஎல் தொடரில் தன்னுடைய சிறப்பான பௌலிங்கை போட்டுள்ளதாக ஐபிஎல்லும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வாழ்த்து
நேற்றைய பும்ராவின் சாதனைகளை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது. ஒரே ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முதல் இந்திய பௌலர் என்ற பெருமை நேற்றைய போட்டியில் 27 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ததன் மூலம் பும்ராவிற்கு கிடைத்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ரபடாவிடம் இருந்து பர்ப்பிள் கேப்பையும் பும்ரா கைப்பற்றியுள்ளார்.
ரசிகர்கள் பாராட்டு
ரசிகர்களும் சமூகவலைதளங்களில் பும்ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் மதிப்பு மிக்க சொத்து என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் மோதவுள்ள அணி குறித்து தெரியவரும்.