பும்ரா அபாரம்
நேற்று பேட்டிங்கில் பிராட் ஓவரில் பும்ரா 35 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனைத் தொடர்ந்த பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், பாரிஸ்டோ, ஸ்டோக்ஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
ஸ்டோக்ஸ் ஆபத்து
இதில் குறிப்பாக ஸ்டோக்ஸ், தனி நபராக நின்று போட்டியின் போக்கையே மாற்ற கூடியவர். ஸ்டோக்ஸ் பொறுமையாக விளையாடி அடித்தளத்தை அமைத்து கொண்டு, பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்தார். 36 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை பளார் என்று மிட் ஆஃப் திசையை நோக்கி அடித்தார்.
பும்ராவின் பாய்ச்சல்
அப்போது மிட் ஆஃப் திசையில் நின்ற பும்ரா சூப்பர் மேன் போல் பாய்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் கேட்ச் பிடிக்க, ஸ்டோக்ஸ் விரக்தியில் சிரித்தவாறு பெவிலியன் நோக்கி சென்றார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பும்ராவின் இந்த சாகசத்தை மற்ற ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
|
மலையேறிய காலம்
பொதுவாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஃபில்டிங் செய்யும் போது மிக ஜாக்கிரதையாக இருப்பார்கள். அதுவும், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லாம் சொல்லவே வேண்டாம். எல்லைக் கோட்டில் பந்தை விழுந்து தடுக்க மாட்டார்கள், அப்படி விழுந்தாலும் காயம் ஏற்பட்டுவிடும். ஆனால் அந்த காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது. தற்போது பும்ரா போன்றோர், மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்.