பும்ராவின் கவலை
இந்த விவகாரம் குறித்து பும்ரா கூறுகையில், ஸ்விங் இல்லாத வேகப் பந்து வீச்சை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பந்தை ஷைன் ஆக்காமல் ஸ்விங் சாத்தியமே இல்லை. இப்போது கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது கூட என்னைக் கவலைப்படுத்தவில்லை. 5 விக்கெட் வீழ்த்த வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என்று கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்பதே கவலையைத் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாற்று வழி தேவை
மீண்டும் கிரிக்கெட் ஆடத் திரும்பும்போது என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை நாம் பின்பற்ற வேண்டியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் எச்சிலுக்குப் பதில் மாற்று ஒன்றை கண்டுபிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஸ்விங் பவுலிங் சுத்தமாக அழிந்து போய் விடும். ஸ்விங் பவுலிங் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டும் சுவைக்காது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக மாறிப் போய் விடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
ஷைன் செய்வது எப்படி?
பந்தை எப்போதும் ஷைன் நிலையில் வைத்திருப்பதே பந்து வீச்சாளர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் பந்தைக் கையாளுவது கடினமாகும். விக்கெட்களை வீழ்த்துவது கஷ்டம். எனவே இதற்கு மாற்று வழி நிச்சயம் தேவை. அப்போதுதான் பவுலர்களுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் ஏதுவானதாக, சாதகமானதாக இருக்க முடியும். இல்லாவிட்டால் ஒரு சார்பான விளையாட்டாக அது மாறிவிடும் என்றார்.
நன்றாக விளையாடுகிறோம்
மேலும் அவர் கூறுகையில், கடந்த இரு வருடங்களாக இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்களை எடுத்துள்ளனர். அதேசமயம், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் விக்கெட் வீழ்த்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது என்று பும்ரா கூறியுள்ளார்.
உடம்பை ட்யூன் பண்ணனும்
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பயிற்சியே இல்லாமல் இருந்து வருகிறோம். மீண்டும் விளையாட திரும்பும்போது உடல் நிலை எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. எல்லா வீரர்களுக்குமே இதே நிலைதான் ஏற்படும். தீவிரப் பயிற்சிக்குப் பின்னர் விளையாடுவது சரியாக இருக்க முடியும். நான் தினசரி சிறிய அளவில் பயிற்சி செய்கிறேன். அது போதாது. முழு அளவிலான பயிற்சி முக்கியமானது. முழு உடல் நிலையையும் பந்து வீச்சுக்கு ஏற்றார் போல டியூன் செய்ய வேண்டியுள்ளது என்றார் பும்ரா.